மனநலம் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை முன்னெடுத்துள்ளார் நடிகை தீபிகா படுகோன். மேலும், அண்மைய பேட்டி ஒன்றில் தாம் முன்பு மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அதில் இருந்து விடுபட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்த இக்கட்டான சூழலில் இருந்து மீண்டு வர தமது குடும்பத்தாரும் மருத்துவ நிபுணர்களும் ஆதரவு அளித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
"மன அழுத்தம் அதிகரித்த காரணத்தால் பல நாள்கள் காலையில் எழுந்திருக்க மாட்டேன். வழக்கத்தைவிட பல மணி நேரம் அதிகம் தூங்கினேன். தூக்கத்தின் மூலம் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம் என்று நம்பியதே இதற்குக் காரணம்.
"அந்தச் சமயத்தில் என்னுடைய பெற்றோர் பெங்களூருவில் வசித்து வந்தனர். அவர்கள் ஒவ்வொரு முறையும் என்னைக் காண வரும்போதும், நான் நன்றாக இருப்பதாக அவர்களிடம் தெரிவிப்பேன். அப்படி ஒரு நாள் அவர்கள் என்னைச் சந்தித்துவிட்டு பெங்களூரு புறப்படும்போது மனமுடைந்து போயிருந்தேன்.
"அதைக் கண்டு என் தாயார் பதறிப்போனார். நண்பர்கள் மூலம் ஏதாவது பிரச்சினையா? இல்லையெனில் பணி சார்ந்த சிக்கல்கள் உள்ளனவா என்று விசாரித்தார். ஒரு தாயாக அவரது தவிப்பை என்னால் உணர முடிந்தது. ஆனால் அவர் எழுப்பிய அந்த கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை. ஏனென்றால், அப்படி எந்த ஒரு பிரச்சினையும் எனக்கு இல்லை. இதை அவரிடம் தெளிவாக விவரிக்க முடியவில்லை," என்று கூறியுள்ளார் தீபிகா.
மகள் எந்த விவரமும் அளிக்கவில்லை என்றாலும் தீபிகாவின் தாயார் அத்துடன் விடவில்லை. பிரச்சினையின் வேர் என்ன என்பதைக் கண்டறிந்து, உரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தாராம். கடவுள்தான் அந்தச் சமயத்தில் பெற்றோரை தம்மிடம் அனுப்பி வைத்ததுபோல் உணர்ந்ததாகச் சொல்கிறார்.
"அந்தக் காலகட்டத்தில் உயிரை மாய்த்துக்கொள்ளும் எண்ணம்கூட அவ்வப்போது தோன்றும். ஆனால் அவற்றை எல்லாம் எப்படியோ கடந்து வந்துள்ளேன். இதற்காக என் தாயாருக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். நான் இப்போது பெறும் வெற்றி, பணம் என எல்லாமே அவருக்குத்தான் போய்ச்சேர வேண்டும்.
"திரையுலகில் நான் புகழின் உச்சியில் இருந்தேன். எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால் திடீரென்று காரணமே இல்லாமல் உடைந்து போவேன். அதீத மன அழுத்தம் ஏற்பட்டது. தினமும் காலையில் எழுந்தபோது ஒன்றுமே இல்லாதது போல் தோன்றும். அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்பது குறித்த எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் வெறுமனே இருக்கும். அதன் காரணமாக அழ ஆரம்பிப்பேன்," என்று தாம் கடந்து வந்த நாள்களை அசைபோடுகிறார் தீபிகா.
பிறகு தியானத்தில் கவனம் செலுத்தத் தொடங்கிய அவர், "மனநல மருத்துவரிடம் சென்று சில ஆலோசனைகளைப் பெற்று மீண்டேன்," என்கிறார் தீபிகா.