புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணை எப்போது முடியும் என்று உச்ச நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. கடந்த 1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தீர்ப்பை எதிர்த்துத் தண்டனைப் பெற்றவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு, சீராய்வு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகின்றன. இந்த நிலையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் சிறையில் இருக்கும் பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில் ராஜீவ் கொலை வழக்கு விசாரணை 17 ஆண்டு களாக நடைபெற்று வருகிறது.
விசாரணை விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இந்த வழக்கை விரைந்து முடிக்க சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனு மீதான விசாரணையில் ஏன் தாமதம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு குற்றம்சாட்டப்பட்டவர்கள் வெளிநாட்டவர்கள் என்பதால் விசாரணையில் தாமதம் ஏற்பட்டது என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விசாரணையை விரைந்து முடிக்கவும் நான்கு வாரங்களில் அறிக்கையைத் தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.