புதுடெல்லி: எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு எதிராக முக்கிய எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய அணியை உருவாக்கும் முயற்சி தீவிரமடைந்துள்ளது. இது தொடர்பாக பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவும் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்துப் பேசினர்.
பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகளை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகிய இருவரும் மேற்கொண்டுள்ளனர்.
எனினும் எதிர்க்கட்சிகள் அணிக்கு காங்கிரஸ் தலைமைஏற்பதில் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
இந்நிலையில் டெல்லியில் சோனியா காந்தியைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ் குமார், நாட்டை முன்னெடுத்துச் செல்ல அனைத்து எதிர்க்கட்சிகளும் கைகோக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்றார். காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலுக்குப் பின் இதுகுறித்த உறுதியான திட்டம் வகுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாஜகவை வீழ்த்துவதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே அணியில் வரவேண்டும் எனத் தாம் விரும்புவதாக லாலு பிரசாத் யாதவ் கூறினார்.
காங்கிரசில் தலைவர் தேர்தல் முடிந்த பின் மீண்டும் சந்திக்கலாம் என சோனியா காந்தி கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே ஹரியானா மாநிலம், பதேஹாபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், நிதிஷ் குமார், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சிவசேனா எம்பி அரவிந்த் சாவந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.