சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவன விமானி மீது, ஆறு ஆண்டுகளுக்குமேல் வருமான வரி ஏய்ப்பு செய்தது, வாடகை மூலம் கிடைக்கும் வருவாய் தொடர்பில் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்தது உள்ளிட்ட 13 குற்றச்சாட்டுகள் நேற்று சுமத்தப்பட்டுள்ளன.
அவர் 2014 முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான தனது வருவாயைக் குறைத்துக் கூறியதால், 59,000 வெள்ளிக்குமேல் வரி ஏய்ப்பு செய்துள்ளார். சிங்கப்பூரரான இந்த 50 வயது விமானியின் பெயர் ஆண்ட்ரூ சூ செங் அய்.
முதன்முதலில் 2013ஆம் ஆண்டுக்கான வருமான விவரங்களில் 56,866 வெள்ளி விடுபட்டிருப்பதை, சூ வருமான வரி ஆணையருக்குத் தெரிவிக்கத் தவறினார். இதனால் அவருக்கு 9,188 வெள்ளி குறைவான வரி விதிக்கப்பட்டது.
அடுத்த ஆறு ஆண்டுகளில் அவர் வேண்டுமென்றே தனது வருவாயைக் குறைத்துக் காட்டியதாகக் கூறப்பட்டது.
மேலும், 2018 ஜூனில் பாலஸ்டியர் சாலை, கிம் யாம் சாலை ஆகியவற்றில் அவருக்குச் சொந்தமான இடங்களில் இருந்து பெற்ற வாடகைப் பணம் தொடர்பிலும் சூ வரி ஏய்ப்பு செய்ததாகக் கூறப்பட்டது. விவரங்கள் கேட்டபோது வேண்டுமென்றே மின்னஞ்சலில் தவறான தகவல்களை அனுப்பியதும் தெரியவந்துள்ளது. இதனால் 2013ஆம் ஆண்டுக்கும் 2018ஆம் ஆண்டுக்கும் இடையிலான வாடகைப் பணம் தொடர்பில் அவர் 229,307 வெள்ளியைக் குறைத்துக் காட்டியுள்ளார்.
விமானி சூ விசாரணையில் ஒத்துழைப்பதைச் சுட்டிய அவரது வழக்கறிஞர், பணிநிமித்தமாக அவர் வெளிநாடு செல்ல அனுமதி வேண்டினார். சூ, சிங்கப்பூரில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் சொத்துகள் வாங்கியிருப்பதைக் குறிப்பிட்ட அரசாங்க வழக்கறிஞர், விமானியான அவர் வெளிநாடு செல்ல அனுமதிக்கப்பட்டால் அவருக்கான பிணைத்தொகையை இருமடங்காக்கக் கோரினார்.
பிணைத்தொகை $80,000லிருந்து $140,000க்கு உயர்த்தப்பட்டு, பணிநிமித்தம் வெளிநாடு செல்ல விமானி சூவிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விசாரணை வரும் நவம்பர் மாதம் தொடரும்.