காந்திநகர்: இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமது குஜராத் பயணத்தின் இரண்டாவது நாளான நேற்று நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய 'வந்தே பாரத்' விரைவு ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
காந்திநகர்-மும்பை இடையே இயங்கும் அந்த ரயிலில் பலதரப்பு மக்களுடன் உரையாடியபடி அவர் பயணம் செய்தார்.
விமானங்களில் காணப்படும் வசதிகளை ஒத்த அதிநவீன வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் விரைவு ரயில் வரிசையில் இந்த ரயில் சேவை மூன்றாவது ஆகும்.
திரு மோடி, பிறகு ரூ.7,200 கோடி மதிப்பிலான பல திட்டங்களையும் தொடங்கிவைத்தார்.
அதையடுத்து அகமதாபாத் நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டத்தைப் பிரதமர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்; பொதுக் கூட்டத்திலும் உரையாற்றினார்.