கன்னட சினிமாவின் முன்னணி இயக்குநரான பிரசாந்த் ராஜ் இயக்கும் தமிழ் படம் 'கிக்'. இதில் சந்தானம் நாயகனாக நடிக்கிறார். அவருடன் நாயகியாக இணைந்துள்ளார் தான்யா ஹோப்.
மேலும், தம்பி ராமையா, பிரமானந்தம், செந்தில், கோவை சரளா, மன்சூர் அலிகான், மனோபாலா, ஒய்.ஜி.மகேந்திரா, மொட்டை ராஜேந்திரன், வையாபுரி உள்பட பலர் நடிக்கிறார்கள். அர்ஜுன் ஜன்யா இசை அமைக்கிறார்.
கதாநாயகனாக மட்டுமே நடிப்பது என சந்தானம் தீர்மானித்த பிறகு அவரது படங்களில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் குறைந்துவிட்டதாக ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். இந்த மனக்குறையைப் போக்கும் வகையில் உருவாகிறது 'கிக்'.
கன்னடத்தில் பல வெற்றிப் படங்களைத் தந்துள்ள பிரசாந்த் ராஜ், கொரோனா நெருக்கடி தீவிரமடையும் முன்பே தமிழில் படம் இயக்க வாய்ப்புகள் தேடிவந்தனவாம். ஆனால் பெரிய வாய்ப்புக்காக காத்திருந்ததாகச் சொல்கிறார் அவர்.
"எனக்கு நகைச்சுவைப் படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். நான் இதுவரை இயக்கியுள்ள பத்துப் படங்களிலும் காதலும் நகைச்சுவையும் அதிகமாக இருக்கும். வாழ்க்கை நமக்கு பல கஷ்டங்களை கொடுத்தபடி இருக்கும். நம்மை அதிலிருந்து விடுவிப்பது நகைச்சுவைதான். இன்றைக்கும் சார்லி சாப்ளினுக்கு இணையாக ஒருவரைக் கண்டுபிடிக்கவே முடிய வில்லை. வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் நகைச்சுவையோடு பார்க்கத் தொடங்கி விட்டால் நாம் எல்லாருமே பல பிரச்சினைகளில் இருந்து தப்பிவிடலாம் என்று தோன்றும்.
"நமக்கு உள்ள கஷ்டம், துக்கம், வறுமை, ஏழ்மை, சோகம் என அனைத்தையும் மறந்து சிரித்து, மகிழ்ச்சியாகப் பொழுது போக வேண்டும். அவ்வாறு நினைத்து உருவாக்கப்பட்ட கதைதான் இந்த 'கிக்' படம். இந்த படத்தை பொறுத்தவரை கிக் என்றால் போதை அல்ல, நகைச்சுவை," என்கிறார் பிரசாந்த் ராஜ்.
விளம்பர நிறுவனத்தில் பணியாற்றும் சந்தானம், வாழ்க்கையில் வெற்றிபெற குறுக்குவழியில் செல்லவும் தயாராக இருப்பவர். அதே துறையில் வேலை பார்க்கும் நாயகி தான்யா ஹோப் நேர்மையை மட்டுமே கடைப்பிடிக்க வேண்டும் என நினைப்பவர். இருவரும் எலியும் பூனையுமாக மோதிக்கொள்வது தான் இப்படத்தின் கதையாம்.
சந்தானத்தை எதற்காக விரும்பிப் பார்க்க வருவார்களோ அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் கச்சிதமாகச் செய்துள்ளதாகச் சொல்கிறது இயக்குநர் தரப்பு.
"சந்தானத்துக்கு ஜோடியாக நடிப்பவர்களும் அவருக்கு இணையாக தாக்குப்பிடிக்க வேண்டும். அவரது 'பஞ்ச்' வசனங்களை எதிர்கொண்டு சமாளிக்கும் பக்குவமான நடிகர்கள் இருந்தால் போதும், படம் நிச்சயம் வெற்றிபெறும்.
"இதை மனதில் வைத்துக்கொண்டு திட்டமிட்டேன். இதுவரை சந்தானத்துடன் நடிக்காமல் இருந்தவர்களை எல்லாம் இப்படத்திற்குள் கொண்டு வந்தேன்.
"எனது எதிர்பார்ப்புகள் எதுவும் வீண் போகவில்லை. தரமான படைப்பை உருவாக்கி உள்ளோம் என்ற மனநிறைவு உள்ளது," என்கிறார் பிரசாந்த் ராஜ்.