கொவிட்-19 தொற்றை எதிர்கொள்ள அமைக்கப்பட்ட அமைச்சுகள்நிலை பணிக்குழு, மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளைச் சார்ந்திருப்பதில்லை என்ற சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சித் தலைவர் பால் தம்பையாவின் கூற்றை தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் மறுத்திருக்கிறார்.
அந்தக் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை, தவறானவை என்று அந்தப் பணிக்குழுவின் இணைத் தலைவர்களில் ஒருவருமான திரு வோங் தெரிவித்தார்.
எப்போதுமே அறிவியல் சான்றுகளையும் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளையும் கேட்டறிந்த பின்னரே பணிக்குழு முடிவெடுத்து வருவதாக அமைச்சர் வோங் சொன்னார்.
“மருத்துவ நிபுணர்கள், பணிக்குழுவின் ஒருங்கிணைந்த அங்கத்தினர். எங்களது எல்லாக் கலந்தாய்வுகளிலும் அவர்கள் இடம்பெற்று வருகின்றனர். சுகாதார அமைச்சர் கான் கிம் யோங்கும் நானும் ஒவ்வொரு முறை செய்தியாளர் கூட்டத்தை நடத்தும்போதும் மருத்துவச் சேவைகள் இயக்குநரான இணைப் பேராசிரியர் கென்னத் மாக் எங்களுடன் இருக்கிறார். சிங்கப்பூரில் கொரோனா கிருமி பரவத் தொடங்கியது முதலே இதுவே வழக்கமாக இருந்து வருகிறது,” என்று அவர் விளக்கமளித்தார்.
ஊழியர்களுக்குக் கிருமித்தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று முதலாளிகளைக் கேட்டுக்கொண்ட ஓர் ஆலோசனைக் குறிப்பிற்கும் மனிதவள அமைச்சே காரணம் என பேராசிரியர் பால் தம்பையா குற்றம் சாட்டியதாகக் கூறப்பட்டது.
அதனையும் தெளிவுபடுத்திய அமைச்சர் வோங், கடந்த பிப்ரவரி மாதம் சிலேத்தார் விண்வெளித் துறைத் தொழிலியல் பூங்காவில் ஒரு கொரோனா தொற்றுச் சம்பவம் பதிவானதைத் தொடர்ந்து, அப்போது அந்த ஆலோசனைக் குறிப்பு வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
அதன் பின்னர், உடனடியாக மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் சென்று, கொரோனா பரிசோதனை செய்துகொண்டு, கிருமி தொற்றவில்லை எனச் சான்று பெற்று வந்தால் மட்டுமே வேலை செய்ய அனுமதிக்கப்படுவர் என்று பல நிறுவனங்களும் தங்களுடைய ஊழியர்களை அறிவுறுத்தியாக திரு வோங் விளக்கினார்.
“பேராசிரியர் தம்பையா தவறான தகவல்களைப் பெற்றிருக்கிறார். மனிதவள அமைச்சு ஒருதலைப்பட்சமாக அந்த ஆலோசனைக் குறிப்பை வழங்கவில்லை. அப்படி ஓர் ஆலோசனைக் குறிப்பை முதலாளிகளுக்கு வழங்கும்படி மருத்துவர்களும் நிபுணர்களும் மனிதவள அமைச்சுக்கு வேண்டுகோள் விடுத்தனர்,” என்றும் அவர் கூறினார்.
மார்சிலிங் - இயூ டீ குழுத் தொகுதியில் உள்ள மக்கள் செயல் கட்சியின் உட்குரோவ் கிளையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தபோது அவர் இந்த விளக்கத்தை அளித்தார்.
“நோய்த்தொற்றியல் துறையில் ஒரு முன்னணி நிபுணர் என்ற வகையில் பேராசிரியர் தம்பையா மீது எனக்கு முழு மரியாதை உண்டு. ஆனால், அரசியல் நோக்கங்களுக்காக அவர் உண்மைகளைத் திரித்துக் கூறியது ஏமாற்றமளிப்பதாக உள்ளது,” என்றார் திரு வோங்.
‘மசெக திரித்துக் கூறுகிறது’
இதனிடையே, தமது சொற்களை மசெக திரித்துக் கூறி வருவது இயல்புக்கு மாறானதாக இருக்கிறது என்று பேராசிரியர் பால் தம்பையா கருத்துரைத்து இருக்கிறார்.
மனிதவள அமைச்சு தனது மருத்துவர்களிடம் இருந்து அல்லது சுகாதார அமைச்சிடம் ஆலோசனை பெற்றது என்பதில் தமக்கு எந்த ஐயமும் இல்லை என்றார் பேராசிரியர். ஆனால், சுற்றறிக்கை மனிதவள அமைச்சாலேயே அனுப்பப்பட்டது என்பதால் இறுதிப் பொறுப்பு அதற்கே இருக்கிறது என்றும் வேலை அனுமதியைத் திரும்பப் பெறுவதை மனிதவள அமைச்சால் மட்டுமே நடைமுறைப்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தம் மீது குற்றம் சுமத்துவதன் மூலம், மசெக இந்த நெருக்கடியை அரசியலாக்கி, அரசியல் ஆதாயம் தேட பயன்படுத்திக்கொள்கிறது என்றும் அவர் சொன்னார்.