தமது பல ஆண்டு அரசியல் பயணத்தை நினைவுகூர்ந்த மசெக வேட்பாளர் திரு சீத்தோ யி பின், பொத்தோங் பாசிர் குடியிருப்பாளர்களைத் தம் வசம் இழுக்க, அதிகம் போராட வேண்டியிருந்தது என்று கூறினார்.
எதிர்க்கட்சியிடமிருந்து பொத்தோங் பாசிர் தனித் தொகுதியைக் கைப்பற்றத் தமக்கு 10 ஆண்டுகள் பிடித்தது என்றும் 2011ஆம் ஆண்டில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வென்றதாகவும் அவர் பகிர்ந்துகொண்டார். அடுத்த சில ஆண்டுகளில் அத்தொகுதியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தியதாக திரு சீத்தோ சொன்னார்.
எனவே, தமது கடமையைத் தொடர்ந்து ஆற்ற, இத்தேர்தல் தமக்கு முக்கியமானது என்று 56 வயது சீத்தோ வலியுறுத்தினார்.
தேர்தல் தொகுதி எல்லை மறுஆய்வுக்குப் பிறகு ஜூ செங், பார்ட்லி சாலையில் வசிக்கும் வட்டாரவாசிகளும் பொத்தோங் பாசிர் தொகுதியில் இடம்பெறுவதால் அவர்களைச் சந்தித்து கருத்து சேகரித்து வருவதாக சீத்தோ கூறினார்.
புதிய பகுதிகளுடன், பொத்தோங் பாசிர் தனித்தொகுதியில் மொத்தம் 18,551 பேர் வாக்களிக்க உள்ளனர்.
பொத்தோங் பாசிரிலுள்ள புதிய வீடமைப்புப் பேட்டைகளில் புதிய பேருந்து சேவை தொடங்குவது குறித்தும் எத்தகைய புதிய வசதிகளை உருவாக்கலாம் என்பது குறித்தும் குடியிருப்பாளர்களிடம் தகவல் திரட்டி வருகிறார் திரு சீத்தோ.
குடியிருப்பாளர்களின் விருப்பத்திற்கு இணங்க, இன்னும் இரண்டு உடற்பயிற்சிக் கூடங்களை தாம் அவ்வட்டாரத்தில் அமைக்கப்போவதாகவும் அவற்றில் ஒன்று பிடாடாரியில் புதிதாக அமைக்கப்பட விருக்கும் சமூக நடவடிக்கை மையத்தில் இடம்பெறும் என்றும் திரு சீத்தோ குறிப்பிட்டார்.
எதிர்காலத் திட்டங்களை முன்வைக்கும் அவரது தொகுதிக்கான தேர்தல் அறிக்கையில் புதிய பலதுறை மருந்தகம் ஒன்றும் அவ்வட்டாரத்தில் அமைக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
“2025ஆம் ஆண்டில், இன்னும் மேம்படுத்தப்பட்ட பொத்தோங் பாசிர் வட்டாரத்தை உருவாக்குவது எனது தேர்தல் வாக்குறுதியாக இருக்கும்,” என்று தெரிவித்தார் திரு சீத்தோ.
வாக்களிக்கும் முன்னர், தாம் இதுவரையில் நிறைவேற்றிய திட்டங்களையும் அடுத்த ஐந்தாண்டு களுக்கு நிறைவேற்ற விரும்பும் திட்டங்களையும் நினைவில் கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
எதிர்வரும் தேர்தலில் இவர் புதுவரவான சிங்கப்பூர் மக்கள் கட்சியின் தலைவர் திரு ஹோசே ரேமண்ட்டுடன் போட்டியிடுகிறார்.