நேற்றிரவு நடைபெற்ற தொகுதி அரசியல் ஒளிபரப்பில் ராடின் மாஸ் தனித் தொகுதியில் மக்கள் செயல் கட்சியின் திரு மெல்வின் யோங்கை எதிர்த்துப் போட்டியிடும் சீர்திருத்தக் கட்சி வேட்பாளர் குமார் அப்பாவு கலந்துகொள்ளவில்லை.
எதிர்பாரா நிகழ்வு ஒன்றால் திரு குமார் அப்பாவுவால் தமது உரையைப் பதிவு செய்யப் போகமுடியவில்லை என்று சீர்திருத்தக் கட்சியின் தலைவர் திரு ஆண்டி சூ கூறினார்.
திரு குமார் அப்பாவு தமது சமூக வலைத்தளம் மூலம் வாக்காளர்களிடம் உரையாற்றுவார் என்று திரு சூ தெரிவித்தார்.
தொகுதி அரசியல் ஒளிபரப்புக்குத் தயாராக அங் மோ கியோ குழுத் தொகுதியில் போட்டியிடும் தமது அணிக்கு போதுமான கால அவகாசம் வழங்கப்படவில்லை என்று சீர்திருத்தக் கட்சி நேற்று முன்தினம் அதிருப்தி தெரிவித்திருந்தது. ஆனால் அனைத்துக் கட்சிகளுக்கும் போதுமான நேரம் வழங்கப்பட்டதாக தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் தெரவித்தது.