இந்தத் தேர்தலில் வெளிநாடுகளில் இருக்கும் 6,570 சிங்கப்பூரர்கள் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர்.
அவர்களுக்காக லண்டன், பெய்ஜிங், கேன்பரா, துபாய், ஹாங்காங், நியூயார்க், சான் ஃபிரான்சிஸ்கோ, ஷங்ஹாய், தோக்கியோ, வாஷிங்டன் எனப் பத்து நகரங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த பொதுத் தேர்தலில் வெளிநாட்டு வாக்காளர்களின் எண்ணிக்கை 4,868ஆக இருந்தது.
இந்தத் தேர்தலில் முதலில் வாக்களித்தவர்களுள் பிரிட்டனில் வசிக்கும் சிங்கப்பூரர்களும் அடங்குவர்.
லண்டனில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் உள்ளூர் நேரப்படி நேற்றுக் காலை 8 மணிக்கு (சிங்கப்பூரில் பிற்பகல் 3 மணி) தனது கதவுகளைத் திறந்துவிட்டது. ஆனால், அதற்குப் பத்து நிமிடங்களுக்கு முன்னதாகவே தூதரகக் கட்டடத்திற்கு வெளியே கிட்டத்தட்ட 15 பேர் வாக்களிப்பதற்காக வரிசையில் நின்றிருந்தனர்.
கொவிட்-19 நோய்ப் பரவல் காரணமாக அவர்கள் ஒவ்வொருவரும் குறைந்தது 2 மீட்டர் இடைவெளிவிட்டு நின்றிருந்தனர்.
தங்களது பெயர்களைப் பதிவுசெய்துகொண்ட வெளிநாடுகளில் உள்ள வாக்காளர்களுக்குத் தேர்தல் கடிதங்கள் அனுப்பப்பட்டன. அதில், முகக்கவசம் அணிந்து வருமாறும் பாதுகாப்பு இடைவெளியைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
பணி நிமித்தம் காரணமாக கடந்த ஆண்டு லண்டனுக்குக் குடிபெயர்ந்த திரு ஸாக் ஹோ, காலை 7.45 மணிக்கே வந்திருந்தவர்களில் ஒருவர். அல்ஜுனிட் குழுத்தொகுதியைச் சேர்ந்த அந்த 28 வயது தணிக்கையாளர் வெளிநாட்டில் வாக்களித்தது இதுவே முதன்முறை.
“அல்ஜுனிட் குழுத்தொகுதியில் கடும் போட்டி நிலவுவது நல்லதுதான் என நினைக்கிறேன். ஒவ்வொரு தேர்தலிலும் வென்ற, தோற்ற கட்சிகளுக்கு இடையிலான வாக்கு வித்தியாசம் மிகக் குறைந்த அளவிலேயே இருந்து வந்துள்ளது,” என்று திரு ஹோ கூறினார்.
“ஒவ்வொரு தேர்தலுக்குப் பிறகும் அரசியல்வாதிகள் தங்களது வாக்குறுதிகளை நிறைவேற்றுகின்றனரா என மக்கள் கவனித்து வருகின்றனர். அது, அரசியல்வாதிகளை விழிப்புடனும் துடிப்புடனும் இருக்கச் செய்து, தொகுதிப் பணிகளில் கவனம் செலுத்தச் செய்கிறது,” என்றார் அவர்.
சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழக மாணவரான திரு டேரன் சோய், வாக்களிப்பதற்காக மாஸ்கோவில் இருந்து லண்டன் சென்றுள்ளார்.
ஹவ்காங் தனித்தொகுதியைச் சேர்ந்த திரு டேரன், மாணவர் பரிமாற்றத் திட்டத்தின்கீழ் வெளிநாடு சென்றுள்ளார்.
“பொதுத் தேர்தல் மிக முக்கியமானது. அதிலும், முதன்முறையாக வாக்களிக்கும் உரிமை பெற்றுள்ளதால் நானும் அதில் எனது பங்கை ஆற்ற வேண்டியதை இன்றியமையாததாகக் கருதுகிறேன்,” என்றார் 24 வயதான திரு டேரன்.