வாக்களிப்பு நிலையத்துக்கு அருகில் குடியிருக்கும் திரு ராஜன் மேனன், வாக்களிக்கக் காத்திருப்போர் தேவைப்பட்டால் பயன்படுத்திக்கொள்வதற்காக தண்ணீர், பானங்கள், கைச்சுத்திகரிப்பான், இருக்கைகள் போன்றவற்றைத் தம்முடைய வீட்டுக்கு வெளியில் வைத்திருந்தார்.
சிஎன்ஐஜே அவர் லேடி ஆஃப் குட் கவுன்செலில் அமைக்கப்பட்டிருந்த வாக்களிப்பு நிலையத்திலிருந்து சுமார் 130 மீட்டர் தொலைவில் (அதாவது அவரது வீட்டுக்கு வெளியே) தற்காலிக மேடை ஒன்றை அமைத்து அதில் தண்ணீர், பானங்கள், கைச்சுத்திகரிப்பான் போன்றவற்றை அடுக்கி வைத்திருந்தார்.
இன்று காலை வாக்களிக்கச் சென்றபோது சுமார் 2 மணிநேரத்துக்கு திரு ராஜன் மேனன் வரிசையில் காத்திருக்க வேண்டியிருந்தது.
அதனையடுத்து, தம்முடைய மகளை தொலைபேசி வழி அழைத்து, பானங்கள் மற்றும் தண்ணீர் போத்தல்கள் ஆகியவற்றை வாங்கி வீட்டுக்கு வெளியில் அடுக்கிவைக்குமாறு கேட்டுக்கொண்டார். வரிசையில் காத்திருப்போர் வேண்டுமானால் பயன்படுத்திக்கொள்ளட்டும் என்ற எண்ணத்தில் இந்த ஏற்பாடு.
அது மட்டுமின்றி, வரிசையில் காத்திருப்போர், கழிவறையைப் யன்படுத்த விரும்பினால் தங்களது வீட்டுக்கு வரலாம் என்ற அறிவிப்பைத் தாங்கிய பலகையையும் அங்கு வைத்திருந்தார் திரு ராஜன் மேனன் . காலை 11.30 மணியளவில் பத்துக்கும் மேற்பட்டோர் அந்தச் சேவையைப் பயன்படுத்தியதாகக் கூறப்பட்டது.