சிங்கப்பூருக்கு முட்டைகளை புருணை ஏற்றுமதி செய்ய இருக்கிறது. இதனை அடுத்து, இங்குள்ள பேரங்காடிகளில் விரைவில் புருணை முட்டைகளை வாங்கலாம்.
புருணையையும் சேர்த்து மொத்தம் 17 நாடுகள் சிங்கப்பூருக்கு முட்டைகளை ஏற்றுமதி செய்யும். மலேசியா, தாய்லாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா, ஸ்பெயின், போலந்து நாடுகள் இவற்றில் அடங்கும்.
சிங்கப்பூருக்கு புருணையும் முட்டைகளை ஏற்றுமதி செய்யும் என்பதால் முட்டைகளை வாங்க சிங்கப்பூர் எடுத்து வரும் பன்மய நடைமுறை மேலும் விரிவடையும்.
புருணை கொஞ்சகாலமாகவே முட்டைகளை ஏற்றுமதி செய்ய ஆர்வமாக இருந்து வந்துள்ளது என்று சிங்கப்பூர் உணவு முகவை அறிக்கையில் தெரிவித்தது.
புருணையில் செயல்படும் ‘கோல்டன் சிக் லிவ்ஸ்டாக் ஃபார்ம்’ என்ற முட்டைப் பண்ணையில் இருந்து முட்டைகளை ‘டாசூன் எஹ்க்ஸ்’ என்ற உள்ளூர் நிறுவனம் இறக்குமதி செய்யும். இந்நிறுவனம், நவம்பரில் இரு முறை முட்டைகளைக் கொண்டு வந்து இருக்கிறது.
“முதலில் கொஞ்சம் முட்டைகளைக் கொண்டுவருவது வசதியாக இருக்கும். சிங்கப்பூர் உணவு முகவை அனைத்து வகை பரிசோதனைகளையும் நடத்த அது தோதாக இருக்கும்.
“சிங்கப்பூர் எந்த அளவுக்குத் தரங்களை எதிர்பார்க்கும் என்பது அந்தப் புருணை முட்டைப் பண்ணைக்குத் தெரியும்,” என்று டாசூன் நிறுவனத்தின் இயக்குநர் இங் காய்ஜுன் கூறினார்.
இதனிடையே, புருணைக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டு இருக்கும் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ கோல்டன் சிக் பண்ணையை செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 13) பார்வையிட்டார்.
“போதிய உணவு கிடைப்பதை உறுதிப்படுத்துவது ஒரு பிரச்சினை. அதேவேளையில், பாதுகாப்பான உணவைப் பெறுவதும் முக்கியமானது.
“இதை மனதில் வைத்து புருணை முட்டைகள் சிங்கப்பூரின் உயர் தரத்தை நிறைவேற்றுபவையாக இருக்கும் என்பதை நேரடியாக உறுதிப்படுத்த நாங்கள் இங்கு வந்திருக்கிறோம்,” என்று அமைச்சர் தெரிவித்தார்.
புருணை முட்டைக்கு சிங்கப்பூர் அனுமதி வழங்கி இருப்பதை அடுத்து அந்த நாட்டின் வேளாண் தொழில்நுட்பத் துறைக்குப் புதிய சந்தை கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.
சிங்கப்பூருக்குத் தேவைப்படும் முட்டைகளில் ஏறக்குறைய 30 விழுக்காட்டை, இப்போது மூன்று உள்ளூர் முட்டை பண்ணைகள் ஈடுசெய்கின்றன. நான்காவது பண்ணை அமைக்கப்பட்டு வருகிறது. அந்தப் பண்ணை இன்னும் ஓரிரு ஆண்டுகளில் செயல்படத் தொடங்கிவிடும்.
புருணை பயணம் மேற்கொண்டிருக்கும் அமைச்சர், அந்த நாட்டின் அமைச்சர்களைச் சந்தித்து, வேளாண்-உணவு மேம்பாடு, சுற்றுப்புற பாதுகாப்பு, நீர்வள நிர்வாகம், பருவநிலை மாற்றம் ஆகிய துறைகளில் இரு நாடுகளும் மேலும் எப்படி ஒத்துழைக்கலாம் என்பது பற்றி விவாதிப்பார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புருணையின் கலாசார, இளையர் விளையாட்டுத் துறை அமைச்சை சேர்ந்த அதிகாரிகளையும் அவர் சந்திப்பார்.
சிங்கப்பூர்-புருணை இளம் தலைவர்கள் பரிவர்த்தனை செயல்திட்டத்தின் முன்னாள் பிரமுகர்களையும் அவர் சந்திப்பார்.
சிங்கப்பூருக்கு இறக்குமதியாகும் முட்டைகளில் பெரும்பாலானவை மலேசியாவில் இருந்து வருகின்றன. இருந்தாலும்கூட காலப்போக்கில் சிங்கப்பூருக்கு வரும் மலேசிய முட்டைகளின் அளவு குறைந்து வருகிறது.
கடந்த 2019ல் சிங்கப்பூருக்கு இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளில் 72% மலேசியாவில் இருந்து வந்தது. இந்த அளவு 2020ல் 59%ஆகவும் 2021ல் 52% ஆகவும் குறைந்துவிட்டது.