$7 உணவுக்காக $700 கட்டணம் செலுத்திய வாடிக்கையாளரை சிராங்கூன் கார்டன் சந்தை, உணவு நிலையக் கடைக்காரர் தேடி வருகிறார்.
செவ்வாய்க்கிழமை (மார்ச் 14) இரவு இந்தப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டது.
அதற்கு அடுத்த நாள், சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரைத் தொடர்புகொள்ள, இந்த விவகாரம் குறித்து ஃபேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டார் வில்லியம் ஃபோங் எனும் அந்தக் கடைக்காரர்.
“காலை வணக்கம், சிராங்கூன் கார்டன் உணவு நிலையத்தில் செவ்வாய்க்கிழமை இரவு 7 மணியளவில் வாடிக்கையாளர் ஒருவர் கூடுதலாக $693 கட்டணம் செலுத்திவிட்டு, அதைக் கவனிக்காமல் சென்றுவிட்டார். அந்த வாடிக்கையாளர் நீங்களாக இருந்தால், எங்களைத் தொடர்புகொள்ளவும். நன்றி,” என்று பதிவிட்ட அந்தக் கடைக்காரர், தமது தொடர்பு எண்ணையும் குறிப்பிட்டார்.
$7 உணவுக்காக அந்த வாடிக்கையாளர் டிபிஎஸ் PayLah செயலி மூலம் தவறுதலாக $700 மாற்றிவிட்டதாகத் தெரிகிறது.
$693 கூடுதல் கட்டணம் செலுத்திவிட்டோம் என்று சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் பதற்றமடையத் தேவையில்லை என்றும் அதற்காகத்தான் தம்மைத் தொடர்புகொள்ளுமாறு ஃபேஸ்புக்கில் தாம் பகிர்ந்ததாகவும் கடைக்காரர் குறிப்பிட்டார்.
இந்த விவகாரம் குறித்து இதுவரை தம்மை எவரும் தொடர்புகொள்ளவில்லை என்று சொன்ன அந்தக் கடைக்காரர், வாடிக்கையாளரின் அடையாளத்தைச் சரிபார்க்க, அவர் பரிவர்த்தனை செய்த ஆதாரத்தை தாம் கேட்கவிருப்பதாகக் கூறினார்.
கடந்த ஜனவரியில், இதே போன்றதொரு சம்பவம் நிகழந்தது. தாம் வாங்கிய உணவுக்காக கூடுதலாக $445.50 செலுத்திய வாடிக்கையாளரை அட்மிரல்டியில் செயல்படும் கடைக்காரர் ஒருவர் தேடினார்.
ஃபேஸ்புக் இதுகுறித்து அவர் தகவல் பகிர்ந்ததைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரிடம் தொகையைத் திரும்பத் தந்தார்.