கொவிட்-19 காலகட்டத்தின்போது பயணம் செய்ய, சுகாதாரப் பராமரிப்பு நிறுவனங்கள், மாற்றம் செய்யமுடியாத குறிப்புகளை வழங்கியதற்குக் காரணமாக இருந்த உள்ளூர் நிறுவனம் ஒன்று, இப்போது போலி கலைநிகழ்ச்சி நுழைவுச்சீட்டு விவகாரத்தில் இறங்கவுள்ளது.
கடந்த மார்ச் மாத இறுதியில், ‘அக்கரேடிஃபாய்’ எனும் அந்த நிறுவனத்துக்கு, மின்னிலக்க அடையாளத்தில் நிபுணத்துவம் பெற்ற அமெரிக்க நிறுவனமான ‘ஒக்டா வென்ச்சர்’ நிதி வழங்கியது.
அந்தத் தொகை, ‘அக்கரேடிஃபாய்’ உலக அளவில் விரிவடைய வழிவகுக்கும்.
ஐந்தாண்டுகளாகச் செயல்பாட்டில் இருக்கும் அந்த சிங்கப்பூர் நிறுவனம், அன்றாடம் நடக்கும் மோசடிகளுக்கு எதிராகப் போராட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.
“மின் வர்த்தகம், நுழைவுச் சீட்டு விற்பனை, செய்தி பரப்புதல் ஆகியவற்றில் மோசடிகளைத் தவிர்ப்பது, அதாவது குடிமக்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் பெரிய பிரச்சினைகளைத் தீர்ப்பது அடுத்த படிகளில் ஒன்று,” என ‘அக்கரேடிஃபாய்’ன் தலைமை நிர்வாக அதிகாரியும் இணை நிறுவனருமான குவா ஸெங் வெய் கூறினார்.
இவ்வாண்டு ஜனவரி 1ஆம் தேதிக்கும் மார்ச் 12ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் கலைநிகழ்ச்சி நுழைவுச்சீட்டுகள் தொடர்பான மின் வர்த்தக மோசடிகளில் குறைந்தது 1,551 பேர் ஏமாந்ததாக சிங்கப்பூர் காவல்துறை கூறியது. குறைந்தது $737,000 இழப்பு ஏற்பட்டது.
அந்த நுழைவுச்சீட்டுகளில் பெரும்பாலானவை, சிங்கப்பூரில் நடைபெற்ற டேய்லர் சுவிஃப்ட்டின் கலைநிகழ்ச்சிக்காக வாங்கப்பட்டன.