இரு ஊழியர்கள் மரணத்தை அடுத்து நிலப் போக்குவரத்து ஆணையத்துடன் கலந்து ஆலோசித்து இடைக்கால பாதுகாப்புக் கட்டுப்பாடுகளை மனிதவள அமைச்சு எஸ்எம்ஆர்டி நிறுவனத்துக்கு விதித்துள்ளது. பாசிர் ரிஸ் நிலையத்தில் மார்ச் 22ஆம் தேதி இரண்டு ஊழியர்கள் ரயில்தண்டவாளத்தில் உயிர் இழந்தனர். இதையடுத்து இந்தப் பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பக்கத்துத் தண்டவாள நடைவழியில் ஊழியர்கள் அனுமதிக்கப்படும்போது ரயில்கள் தானியக்க முறை மூலமாக இயங்கக்கூடாது. அங்கு ஓட்டுநர்களே ரயிலை இயக்கவேண்டும்.
எல்லா வேலைகளும் நடக்கும் தண்டவாளப் பாதைகளை தனித்து ஒதுக்கிவிட வேண்டும். அப்படி தனித்து ஒதுக்கப்படுவதைச் சரிபார்க்க தண்டவாளத்தில் பணிசெய்யும் ஊழியர்களுக்கும் நடவடிக்கை கட்டுப்பாட்டு நிலையத்துக்கும் இடையில் ஆற்றல்மிக்க அங்கீகார நடைமுறை தேவை. ஊழியர்கள் வேலை இடத்தைவிட்டு அகலும் வரையில் இந்த தனித்து ஒதுக்கி வைக்கும் நடவடிக்கை நடப்பில் இருக்கவேண்டும். இரண்டு திசைகளிலும் வரும் ரயில்கள் பற்றி விழிப்பூட்ட கண்காணிப்பாளர்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும் என்று அந்த இடைக்காலத் தற்காப்பு உத்தரவுகள் தெரிவிக்கின்றன.