சிங்கப்பூரையும் மலேசியாவையும் இணைக்கும் உட்லண்ட்ஸ் பாலத்தில் (படம்) வாகனங்கள் பயணிக்க போதுமான இடம் இருப்பதால் அது மாற்றப்படாது என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்தார். இதுதொடர்பாக இரு நாடுகளின் அரசாங்கங்கள் கூட்டு ஆய்வு நடத்தி அதனை ஒட்டி தனித்தனியே ஆராய்ந்து இந்த முடிவுக்கு வந்துள்ளதாக டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் கூறினார். "உட்லண்ட்ஸ் பாலத்தில் போதுமான இடம் உள்ளது. அதை மாற்றுவது தீர்வாகாது," என்று நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின் இரண்டாம் நாளான நேற்றைய தினத்தில் அவர் குறிப்பிட்டார்.
பாலத்தை மாற்றுவதற்குப் பதிலாக அதில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காண இரு நாடுகளும் செயல்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார். தொழில்நுட்பம், உள்கட்டமைப்புகளை மேம்படுத்துதல் போன்றவற்றால் சோதனைச் சாவடிகளில் நடைபெறும் பணிகள் நேர்த்தியாக நடைபெற கையாளப்படும் அணுகுமுறையை மேம்படுத்துவது முக்கியம் என்றார் அமைச்சர்.