வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் தாம் பயன்படுத்திய வார்த்தைகள் குறித்து மத்திய சிங்கப்பூர் வட்டார மேயர் டெனிஸ் புவா மன்னிப்பு கோரியுள்ளார். ஜாலான் புசார் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திருவாட்டி புவா, எந்த ஒரு குறிப்பிட்ட சாராரையும் இழிவுபடுத்துவது தமது நோக்கமல்ல என்று நேற்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தார்.
"வெளிநாட்டு ஊழியர்கள் அதிகமாக இருப்பதை வர்ணிக்க 'நடமாடும் வெடிகுண்டுகள்' என்ற வார்த்தையை நான் பயன்படுத்தியிருக்கக்கூடாது. என் தொகுதியில் உள்ள வெளிநாட்டுத் துப்புரவாளர்களுடன் எனக்கு நல்ல உறவு இருக்கிறது. அவர்கள் செய்து வரும் உதவிக்கு நன்றி. என் கருத்து உங்களை வருத்தம் அடைய வைத்திருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள்," என்று திருவாட்டி புவா தெரிவித்தார்.
2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் லிட்டில் இந்தியாவில் நிகழ்ந்த கலவரத்துக்கு முன்பு அந்த வட்டாரத்தில் ஏராளமான வெளிநாட்டு ஊழியர்கள் கூடுவதைப் போலவே தற்போதும் கூடுகின்றனர் என்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்த திருவாட்டி புவா அது குறித்து அக்கறை தெரிவித்திருந்தார்.