வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் 'நமது குடியிருப்பு நகரை உருமாற்றுவோம்' திட்டத்தின் கீழ் தோ பாயோ, உட்லண்ட்ஸ், பாசிர் ரிஸ் குடியிருப்புப் பகுதிகளில் அதிக வசதிகள், பசுமையான மேம்பட்ட இணைப்புப் பகுதிகள் ஏற்படுத்தப்பட வுள்ளன. தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் டெஸ்மண்ட் லீ இந்தத் தகவலை நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார். 400 குடியிருப்பாளார்கள், பங்குதாரர்களுடன் 11 விவாதக் கூட்டத் தொடர்களுக்குப் பிறகு இந்த மாற்றங் கள் முன்வைக்கப்பட்டுள்ளன. உட்லண்ட்ஸில் சமூக நடவடிக்கைகளுக்கான புதிய இடம் அமைக்கப்படுவதுடன் 'வாட்டர்ஃபிரன்ட்' நிலவனப்பும் மேம்படுத்தப்படும்.
பாசிர் ரிஸ்ஸில் புதிய பேருந்து நிலையம், பாசிர் ரிஸ் எம்ஆர்டி நிலையம் ஆகியன ஒருங்கிணைந்த மேம்பாடு காண்பதுடன் அக்கம்பக்க நிலையங்களிலும் பாசிர் ரிஸ் பூங்காவிலும் பொழுதுபோக்குக்கான கூடுதல் இடங்கள் அமைக்கப்படும். தோ பாயோ நகர மையத்தில் பாதசாரிகள் கடைத்தொகுதி மறுசீரமைக்கப்படுவதுடன் மேற்கூரையுடன் கூடிய கடைத் தெருக்கள், சைக்கிள் களுக்கான பிரத்தியேகப் பாதைகள் அமைக்கப்படும். இந்தத் திட்டங்கள் அடுத்த ஐந்து முதல் பத்து ஆண்டுகளுக்குள் நிறைவுபெறும். இந்த மூன்று நகரங்களும் 'நமது குடியிருப்பு நகரை உருமாற்றுவோம்' திட்டத்தின்கீழ் மேம்பாடு காணும் மூன்றாவது குழுவைச் சேர்ந்தவை.