பாசிர் ரிஸ் ஸ்திரீட் 21ன் புளோக் 247ல் ஞாயிற்றுக் கிழமை நடந்த மின்தூக்கி விபத்தைத் தொடர்ந்து 77 வயது முதியவர் நேற்றுக் காலை மருத்துவமனையில் இறந்தார். திரு லிம் ஹாங் சியாங் ஞாயிறு காலை கீழே செல்வதற்காக 10வது மாடியில் மின்தூக்கியில் ஏறினார். அவர் இயந்திர சக்கரநாற்காலியில் இருந்தார். அவருடன் அண்டை வீட்டார்கள் இருவர் மின்தூக்கியில் இருந்தனர். மின்தூக்கி முதல்மாடியை அடைந்ததும் திரு லிம் சக்கர நாற்காலியைப் பின்பக்கமாகச் செலுத்தி வெளியேற முயன்றார்.
ஆனால், மின்தூக்கி தரைமட்டத் திற்குச் சற்று மேலே நின்று விட்டதால் தரைமட்டத்திலிருந்து சுமார் 15 சென்டிமீட்டர் இடைவெளி ஏற்பட்டது. அதைத் திரு லிம் கவனிக்கவில்லை என்று அவரது 45 வயது மகன் லிம் கெங் சுவீ தெரிவித்தார். "சக்கரநாற்காலி குப்புற சாய்ந்து என் தந்தை பின்பக்கமாக விழுந்து தலையை இடித்துக் கொண்டார். அவர் தலைப்பக்கமாக விழுந்ததால் மண்டை ஓடு உடைந்து மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டது," என்று திரு லிம் கெங் சுவீ சொன்னார்.
மின்தூக்கியில் சக்கர நாற்காலியில் சென்ற முதியவர் காயமடைந்து மருத்துவமனையில் மரணம் அடைந்தார். படம்: வான் பாவ்