புக்கிட் பாத்தோக் இடைத்தேர்தல் அன்றும் அதற்கு முந்திய நாளான பிரசார ஓய்வு நாள் அன்றும் தேர்தல் தொடர்பான செய்திகளை வெளியிடுவதற்கான தடையை மீறி இருக்கலாம் என்று சமூக அரசியல் வலைத்தளம் ஒன்றின் மீதும், இரு தனிமனிதர்கள் மீதும் போலிசில் புகார் செய்யப்பட்டுள்ளது. 'தி இன்டிபென்டண்ட்' என்ற வலைத்தளம் மீதும் குமாரி டியோ சோ லங், திரு ரோய் ங்ரெங் ஆகியோர் மீதும் போலிசில் புகார் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் துறை நேற்றுக் கூறியது. இதுபற்றிய இரு கட்டுரைகள் மே 6ஆம் தேதி அன்றும் மே 7ஆம் தேதி அன்றும் வெளியிடப்பட்டதாக நம்பப்படுகிறது.
தேர்தல் தொடர்பான விளம்பரங்களை தேர்தல் பிரசார ஓய்வு நாளன்றும் தேர்தல் நாளன்றும் வெளியிடுவது தடை செய்யப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் எழுப்பிய பிரச்சினைகளைத் தீர ஆலோ சித்து வாக்களிக்க வாக்காளர் களுக்கு நேரம் வழங்குவதே இதன் நோக்கம். அந்தக் கட்டுரைகளின் தன்மை, அது எவ்வாறு வாக்காளர்களைப் பாதிக்கக்கூடும் போன்றவற்றைக் கருத்தில்கொண்டு போலிசில் புகார் செய் யப்பட்டதாக துணைத் தேர்தல் அதிகாரி தெரிவித்தார். "வழக்கமாக அரசியல் பிரச்சினைகள் பற்றி விவாதித்து அவற்றைச் செய்திகளாகப் பரப்பும் தி இன்டிபென்டெண்ட் போன்ற சமூக வலைத்தளங்கள் தங்க ளுடைய செயலுக்கு பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும்," என்று தேர்தல் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
மேலும் 'தி இன்டிபென்டண்ட்' வலைத்தளம், துணைத் தேர்தல் அதிகாரி இந்தத் தடையைப் பற்றி நினைவூட்டிய பின்னரும் பிரசார ஓய்வு நாளன்றும் தேர்தல் நாளன்றும் தொடர்ந்து தனது கட்டுரை களை வெளியிட்டு வந்துள்ளது. அந்த வலைத்தளம் பிரசார ஓய்வு நாளன்று இரு கட்டுரைகளைப் பதிவேற்றியது. அதில ஒன்று, மே 5ஆம் தேதி மக்கள் செயல்கட்சி நடத்திய இறுதிப் பிரசாரத்தில் துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னத்தின் பேச்சின் முக்கிய பகுதிகளைக் கொண்டது. மற்றொன்று அந்த இடைத்தேர்தல் பற்றி பாட்டாளிக் கட்சி உறுப் பினர் கூறிய கருத்துகளின் சுருக் கம். மேலும், தேர்தல் அன்று திரு டான் செங் போக்கின் கட்டுரையைப் பதிவேற்றியது தி இன்டிபென்டண்ட் வலைத்தளம். குற்றம் நிரூபிக்கப்பட்டால் $1,000 வரையிலான அபராதமோ 12 மாதங்கள் வரையிலான சிறைத்தண்டனையோ அல்லது இரண்டுமோ வழங்கப்படலாம்.