சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் மூத்த நிர்வாகி களான திரு பேட்ரிக் டேனியலும் திரு ஆண்டனி டானும் துணைத் தலைமை நிர்வாக அதிகாரிகளாகப் பதவி உயர்வு பெற்றுள்ளனர். தற்போது எஸ்பிஎச்சின் ஆங்கிலம், மலாய், தமிழ் ஊடகப் பிரிவுக்குத் தலைமை ஆசிரியராக இருக்கும் 61 வயது திரு பேட்ரிக் டேனியலும் சீன ஊடகக் குழுமத்தின் நிர்வாக துணைத் தலை வராகவும் ஊடக உத்தி, ஆய்வுப் பிரிவின் தலைவராகவும் இருக்கும் 43 வயது திரு ஆண்டனி டானும் துணைத் தலைமை நிர்வாகிகளாக ஜூலை முதல் தேதி பொறுப்பேற்பர். அவர்கள் எஸ்பிஎச்சின் தலைமை நிர்வாக அதிகாரியான 63 வயது அலென் சானின் கீழ் பணிபுரிவர். ஆங்கிலம், மலாய், தமிழ் ஊடகப் பிரிவுக்குத் தலைமை ஆசிரியராக 50 வயது வாரன் ஃபெர்னாண்டஸ் பொறுப்பேற்பார். ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் பதவியையும் அவர் தொடர்வார்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பத்திரிகையின் துணை ஆசிரியரான திருமதி சுமிகோ டான், 52, பத்தி ரிகையின் நிர்வாக ஆசிரியர் ஆகிறார் (executive editor). ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸின் நிர்வாக ஆசிரியரான (managing editor) இக்னேஷியஸ் லோ, 43, ஆங்கிலம், மலாய், தமிழ் ஊடகப் பிரிவின் நிர்வாக ஆசிரியர் பொறுப்பேற்கிறார். நேற்று அறிவிக்கப்பட்ட இந்த மாற்றங்களை எஸ்பிஎச் குழுமத்தின் செயல்பாடுகளை வலுவாக்கி, அடுத்தநிலைக்கு எடுத்துச்செல் லும் நோக்கில் மேற்கொள்ளப் பட்டுள்ள தலைமைத்துவத் தொடர்ச்சித் திட்டம் என்று திரு அலென் சான் குறிப்பிட்டார். "பேட்ரிக், ஆண்டனி இருவரும் மூத்த நிர்வாகக் குழுவின் முக்கிய உறுப்பினர்கள். எஸ்பிஎச்சில் 30 ஆண்டுகால அனுபவமுள்ள ஊடகத் துறை ஜாம்பவான் பேட்ரிக். ஆண்டனி புதிய பார்வைகளையும் யோசனைகளையும் கொண்டுள்ளவர்," என்றார் அவர்.
"எங்கள் தொழிலில் உள்ள சவால்களையும் வாய்ப்புகளையும் எதிர்கொள்வதில் இருவரும் என்னுடன் அணுக்கமாகப் பணியாற்றி, எஸ்பிஎச்சை மேலும் உயரங் களுக்குக் கொண்டு செல்வர்," என்று திரு சான் நம்பிக்கை தெரிவித்தார். உலக ஊடகத் தொழிலில் வெற்றியாளாராகத் திகழும் வகையில் எஸ்பிஎச்சின் ஊடகச் செயல்பாடுகளை வலுவான அடித்தளத்தில் வைத்திருப்பதே தமது முக்கிய இலக்கு என்று கூறினார் திரு பேட்ரிக் டேனியல். "ஊடகத் தொழில் மின்னிலக்க மாற்றங்கள், புத்தாக்கத்தின் பல அலைகளின் தாக்குதலைத் தாக் குப்பிடித்தது," என்ற திரு பேட்ரிக், "ஆனால், வாடிக்கையாளர்களுக்கு பெறுமதி தரக்கூடிய முழுமையான பல்லூடக, பலதள அமைப்பாவதை நாங்கள் விரைவுபடுத்த வேண் டும்," எனக் குறிப்பிட்டார்.
எஸ்பிஎச்சில் 1986ஆம் ஆண்டு சேர்ந்த திரு பேட்ரிக், ஆங்கிலம், மலாய், தமிழ் ஊடகப் பிரிவுடன் விளம்பரப் பிரிவு, மின்னிலக்கம், தகவல் தொழில்நுட்பப் பிரிவு போன்ற ஏனைய முக்கிய பிரிவுகளின் மேற்பார்வையாளராகவும் தொடர்வார். ஆங்கிலம், மலாய், தமிழ் ஊடகப் பிரிவின் கீழ் தமிழ் முரசு இடம்பெறுகிறது.