வெளிநாடுகளில் வசிக்கும் சிங்கப்பூரர்களின் பிள்ளைகள் சிங்கப்பூரின் உயர்நிலைப் பள்ளிகளில் அல்லது தொடக்கக் கல்லூரிகளில் சேர விரும்பினால் அவர்கள் இன்று முதல் அவற்றில் பதிவு செய்து கொள்ளலாம் என்று கல்வி அமைச்சு நேற்று அறிவித்தது. திரும்பி வரும் சிங்கப்பூரர்களுக்கான பள்ளி மாணவர் சேர்க்கை திட்டம் (ஸ்பெர்ஸ்) மூலம், 2017ஆம் ஆண்டில் உயர்நிலைப் பள்ளிகளிலோ, தொடக்கக் கல்லூரிகளிலோ மில்லேனியா ஒருங்கிணைந்த கல்விக் கழகத்திலோ சேர விரும்பும் மாணவர்கள் இன்று முதல் பதிந்துகொள்ளலாம். வெளிநாடுகளில் வேலை செய்யும் சிங்கப்பூரர்களின் பிள்ளைகள் எளிதில் கல்வி அமைச்சின் பள்ளிகளில் சேர வகை செய்யும் திட்டம்தான் 'ஸ்பெர்ஸ்'. அவர்கள் விரும்பும் பள்ளியில் சேர அந்த மாணவர்கள் 'ஸ்பெர்ஸ்' தேர்வை ஒரு முறை எழுத வேண்டும்.
உயர்நிலை 1 முதல் 3 வரை சேர விரும்பும் மாணவர்கள் செப்டம்பர் மாதம் 23ஆம் தேதியன்று ஸ்பெர்ஸ் தேர்வு எழுத வேண்டும். பல்கலைக்கழக புகுமுக வகுப்பில் சேர விரும்பு வோர் ஸ்பெர்ஸ் தேர்வை நவம்பர் 23ஆம் தேதியன்று எழுத வேண்டும். தேர்வின் முடிவுகள் டிசம்பரில் வெளியாகும். அதற்கேற்ப அவர்கள் 2017 ஜனவரியில் பள்ளியில் சேர்ந்துகொள்ளலாம். இது பற்றி மேல் விவரங்களுக்கு கல்வி அமைச்சின் இணையப் பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 6872 2220 எனும் அமைச்சின் தொலைபேசி எண்ணில் பேசலாம்.