இறால் பாதுகாப்பானதே: செங்காங் ஈரச் சந்தை இறால் குறித்த புகாருக்கு ஆணையம் பதில் செங்காங் ஈரச் சந்தையில் விற்கப்பட்ட இறால் குறித்த புகாருக்கு பதிலளித்த ஆணையம், அந்த இறால் சாப்பிடுவதற்கு ஏற்றதே, அதில் வெளியாகும் ஒருவித கண்ணாடிக் குமிழ் அந்த இறாலின் ஒரு பகுதியே என்று கூறியுள்ளது. செங்காங் ஈரச் சந்தையில் கடந்த வாரம் விற்கப்பட்ட இறால் வழக்கத்திற்கு மாறாக இருந்தது எனவும் அதன் தலைப் பகுதியில் முட்டை முட்டையாகக் கண்ணாடிக் குமிழ் போல் காணப்பட்டதாகவும் கூறப்பட்டது. இது குறித்து வேளாண் உணவு, கால்நடை ஆணையத்திற்குப் புகார் வந்ததாகவும் ஆணையம் அது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளதாகக் கூறியது. இறாலின் எடை கூடுவதற்காக ஜெலட்டின் எனப்படும் ஊண்பசை செலுத்தப்பட்டுள்ளதா என்பது பற்றி ஆணையம் சோதனை மேற்கொண்டுள்ளது.
கடந்த வாரம் திருமதி ஹுவாங் என்பவர், செங்காங் ரிவர்வேல் பிளாசாவில் உள்ள ஈரச்சந்தை யில் தான் வாங்கி வந்த இறாலை சுத்தம் செய்யும்போது இறாலில் ஒரு வகை பசை ஒட்டியிருப்பதைக் கண்டார். சுத்தம் செய்த பின்னர் இறால்களை கொதி நீரில் போட்டு வேக வைத்ததும் அதனுடன் ஒட்டியிருக்கும் அந்தப் பசைக் குமிழ்கள் ரப்பரை போன்று கெட்டியாகி விட்டது என ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில் கூறினார். வியட்னாமில் இறாலின் எடையை அதிகரிப்பதற்கு ஜெலட்டின் எனப்படும் ஒரு வகை இரசாயனப் பொருள் செலுத்தப்படுவதாக அண்மையில் செய்தித் தாளில் படித்தது அவருக்கு நினைவுக்கு வந்தது.
சீனாவில் இருந்து குடிபெயர்ந்துள்ள நிரந்தரவாசியான அவர், "சீனாவில் இதுபோன்று இறால், சோத்தோங் ஆகியவற்றில் எடை அதிகரிப்பதற்காக சில தில்லு முல்லு வேலைகள் நடக்கும். அதே போன்ற கண்ணாடிக் குமிழ்களைத்தான் இந்த இறால்களில் நான் இப்போது கண்டேன்," என்றார். மலேசியா, இந்தோனீசியா, வியட்னாம் ஆகிய நாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு இறால் இறக்குமதியாகிறது.