வில்சன் சைலஸ்
தொலைந்துபோன உறவுகளைத் தேடிக் கண்டுபிடித்து மறக்க முடியாத பிறந்தநாள் பரிசைத் தாய்க்குக் கொடுத்துள்ளனர் சகோதரிகள் மூவர். பல இன மக்கள் வாழும் சிங்கப்பூரில் இவர்களுக்கு இரு இனங்களில் இப்போது உறவினர்கள் உண்டு. திருமதி தனபாக்கியம் ரெங்க சாமிக்கு வயது 80. ஜூன் 17ஆம் தேதி பிறந்த இவருக்காக கடந்த மாதம் 26ஆம் தேதி சிங்கப்பூர் இந்தியர் சங்கத்தில் திருமதி தனபாக்கியத்தின் பிள்ளைகள் அனை வரும் கொண்டாட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், நண்பர்கள் என அனைவரின் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்ற திருமதி தனபாக்கியத்தின் 80வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சுமார் 50 ஆண்டுகளாகத் தொடர்பின்றி இருந்த சீன உறவினர்கள் மீண்டும் கூடி இன்ப அதிர்ச்சி அளித்தனர். சீனராகப் பிறந்து இந்தியராக வளர்ந்தவர் புடவை கட்டி தெளிவாகத் தமிழ் பேசினாலும் பார்ப்பவர்கள் இவரைச் சீனர் என்றே நினைப்பர். காரணம், திருமதி தனபாக்கியத்தை ஈன்றவர்கள் 1930களில் பிழைப்புக்காக சீனாவிலிருந்து சிங்கப்பூர் வந்தவர்கள்.
உடல்நலம் சரியில்லாத காரணத்தால் தங்களுக்குப் பிறந்த முதல் குழந்தையை திருமதி தனபாக்கியத்தின் சீனப் பெற்றோர் அதே சாங்கி கம்பத்தில் வசித்த இந்தியர்களுக்கு தத்துக்கொடுத்தனர் என விவரித்தார் திருமதி தனபாக்கியத்தின் மூத்த மகளான 50 வயது திருமதி விஜயலட்சுமி (படத்தில் கறுப்பு நிறச் சேலை, ஆரெஞ்சு நிறச் சட்டை அணிந்து பின் வரிசையில் அமர்ந்திருப் பவர்). "என் தாயைத் தத்தெடுத்த பெற்றோருக்கு அப்போது குழந்தைகள் இல்லை. சீனக் குழந்தையாக இருப்பினும் தமிழர்களின் பண்பாட்டிலும் கலாசாரத் திலும் என் தாத்தா, பாட்டி என் தாயை வளர்த்தனர்," என்றார் அவர்.
பதின்ம வயதிலேயே திரு மணம் செய்த திருமதி தனபாக்கியம், மூன்று பிள்ளைகள் பிறந்த பிறகே தம்மை வளர்த்த பெற்றோர், தம்மைப் பெற்றவர்களைத் தமக்கு அடையாளம் காட்டியதாகவும் நடந்தவற்றைத் தமக்கு விவரித்ததாகவும் சொன்னார். அப்போது பொதுப் பயனீட்டுத் துறையில் வேலை செய்துகொண்டிருந்த கணவருடன் ஜாலான் புசாரின் கிங் ஜோர்ஜஸ் அவென்யூவில் வசித்த வந்த திருமதி தனபாக்கியத்தை அடிக்கடி அவரது சீனப் பெற்றோர் வந்து சந்தித்துச் செல்வர் என்றும் திருமதி தனபாக்கியம் கூறினார்.
எனினும், சிறு வயதில் தம்மீது அளவுகடந்த பாசத்தைப் பொழிந்த தமது இந்தியப் பெற்றோரின் மீது அதிக நாட்டம் செலுத்திய இவர், சிலிகிக்குக் குடிப்பெயர்ந்தபோது சீனக் குடும்பத்தாருடன் இருந்த உறவைத் தொடரவில்லை.
திருமதி தனபாக்கியத்தின் ஆறு பிள்ளைகள், பத்து பேரப் பிள்ளைகள், எட்டு கொள்ளுப்பேரப் பிள்ளைகளுடன் இப்போது சீன உடன் பிறப்புகளின் குடும்பமும் இணைந்துள்ளது. தற்போது தமது இளைய மகன் வீட்டில் வசித்துவரும் அவரை அவரது சீனத் தம்பியும் தங்கையும் தங்கள் குடும்பத்தினருடன் அடிக்கடி சென்று சந்தித்து மகிழ்கின்றனர். 80வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் உறவுகளுடன் தனபாக்கியம் (நடுவில் பச்சை நிறச் சேலையில்). படங்கள்: வான் பாவ்