தங்களைத் தாக்கி தங்களிடமிருந்த பணத்தையும் விலை உயர்ந்த பொருட்களையும் யாரோ கொள்ளையடித்துச் சென்றுவிட்டார்கள் என்று இரண்டு ஆடவர்கள் போலிசிடம் பொய்ப் புகார் செய்திருக்கிறார்கள் என்று சந்தேகிக்கப் படுகிறது. அவர்கள் இருவரையும் போலிஸ் விசாரித்து வருகிறது. அந்த இருவரில் 31 வயது ஆடவர் ஒருவர் செவ்வாய்க்கிழமை அதிகாலை சுமார் 2.40 மணிக்கு டிக்சன் ரோட்டில் மூன்று பேர் தன்னைத் தாக்கி தன் பையையும் $700 இருந்த பணப் பையையும் கொள்ளையடித்துச் சென்றுவிட்டதாக ரோச்சோர் அக்கம்பக்க போலிஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலிசிடம் புகார் செய்த மற்றொருவருக்கு வயது 24. இவர் புதன்கிழமை காலையில் 999 எண்ணில் தொடர்பு கொண்டு, அங் மோ கியோ அவென்யூ 3ல் இருக்கும் 232வது புளோக்கில் ஒருவர் தன்னைத் தாக்கி தன் தங்கச் சங்கிலியைக் கொள்ளையடித்துச் சென்றுவிட்டதாகப் புகார் செய்தார். இந்த இருவரும் போலிசிடம் பொய்ப் புகார் செய்திருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.
கடந்த இரண்டு வாரங்களில் இத்தகைய பொய்ப் புகார்ச் சம்பவங்கள் அதிகரித்திருப்பதை போலிஸ் சுட்டிக் காட்டியுள்ளது. இப்படி பொய்ப் புகார் செய்பவர்களுக்குச் சட்டத்தின்படி கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்று போலிஸ் எச்சரித்துள்ளது. அரசாங்க ஊழியரிடம் பொய்த் தகவல் தெரிவித்து யாரேனும் குற்றவாளி என்று தீர்ப்பானால் அவருக்கு ஓராண்டு வரைப்பட்ட சிறைத் தண்டனை அல்லது $5,000 வரை அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாகக் கிடைக்கும். இப்படி பொய்ப் புகார் செய்வதால் போலிசின் வளங்களும் ஆற்றலும் நேரமும் வீணாவதாக போலிஸ் குறிப்பிட்டுள்ளது.