எதிர்காலத்திற்கு எத்தகைய சிங்கப்பூரை நாம் உருவாக்க விரும்புகிறோம் என்பதற்கு, கடந்த 15 ஆண்டுகளைப் பின்னோக்கிப் பார்ப்பதும் அடுத்த 15 ஆண்டுகளுக்கான திட்டங்கள் குறித்து யோசிப்பதும் நல்லதொரு கண்ணோட்டத்தைத் தரும் என்று தேசிய தினப் பேரணி உரையில் பிரதமர் லீ சியன் லூங் கூறினார். மரினா பே, மரினா பராஜ், கரையோரப் பூந்தோட்டங்கள், புதிய மத்திய வர்த்தக வட்டாரம், பொங்கோலில் புதிய வீவக குடியிருப்புகள், ஒன் நார்த் வட்டாரத்தில் அமைக்கப்பட்ட பயோபோலிஸ், மீடியாபோலிஸ், ஃபியூஷன் போலிஸ் என கடந்த 15 ஆண்டுகளில் சிங்கப்பூரின் சாதனைகளை அவர் சுட்டிக்காட்டினார்.
அடுத்த 15 ஆண்டுகள்: அடுத்த 15 ஆண்டுகளில் சிங்கப்பூரில் உருவாக்கப்படவுள்ள வசதிகள் குறித்தும் பிரதமர் லீ குறிப்பிட்டார். அவை: * சிங்கப்பூரின் வடக்கு வாயிலாக விளங்கும் உட்லண்ட்ஸில் வர்த்தக வசதிகள், வீடுகள், நீர்நிலைக்கு அருகில் புதிய பூங்கா ஆகியவற்றை உள்ளடக்கிய உட்லண்ட்ஸ் வட்டார நிலையம். * 24 கிமீ. தூரத்துக்கான 'ரயில் காரிடார்' பல்வேறு விதமான பயன்பாடுகளுக்கு உகந்ததாக சைக்கிள் பாதைகள், ஓய்வுக் கூடாரங்கள், துடிப்பான நடவடிக்கைக்கான இடங்கள், அமைதியான மழைக்காடுகள் போன்றவற்றை உள்ளடக்கியதாக மறுநிர்மாணிக்கப்படும்.