இருபுறமும் ஒட்டக்கூடிய நாடாவை உள்ளங்கைகளில் ஒட்டிக்கொண்டு மரினா பே சேண்ட்ஸ், ரிசார்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசா ஆகிய இடங்களில் உள்ள சூதாட்டக் கூடங் களில் 60க்கும் அதிகமான வாடிக்கையாளர்களிடமிருந்து $100,225 மதிப்பிலான சூதாட்ட வில்லைகளை சீனாவைச் சேர்ந்த மூவர் திருடியுள்ளனர். மூன்று வார கால திருட்டுச் செயல்களுக்குப் பிறகு ஸெள ஹைமிங், 41, லௌ ஜியாங்கோ, 37, ஆகிய இருவரும் சீனாவுக்குத் திரும்பினர்.
ஆனால் 10 நாட்களுக்குப் பிறகு மீண்டும் சிங்கப்பூர் வந்து மரினா பே சேண்ட்ஸுக்குள் நுழைய முற்பட்டபோது இருவரும் பிடிபட்டனர். அவர்கள் இருவருக்கும் சென்ற மே மாதத்தில் 18 மாத சிறைத் தண்டனை விதித்து கீழ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அரசுத் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் மீதான தண்டனை நேற்று ஈராண்டுகளுக்கு உயர்த்தப்பட்டது. இந்தக் கும்பலின் மூன்றாவது நபரான ஹுவான் சியாமெய் எனும் பெண் தேடப்பட்டு வருகிறார். ஸெள, லௌ ஆகிய இருவரும் ஹுவாங்கை மரினா பே சேண்ட்ஸ் சூதாட்டக் கூடத்தில் சந்தித்து வில்லைகள் திருடுவது பற்றி அறிந்துகொண்டனர். திருடியதில் 20% ஹுவாங்குக்கு வழங்கினர்.