புகைமூட்டம் காரணமாக சிங்கப்பூரில் காற்றின் தரம் சுகாதாரமற்ற நிலையிலேயே நீடிக்கும் என முன்னுரைத்துள்ள நிலையில் தேசிய சுற்றுப்புற வாரியம் தனது அக்கறையை இந்தோனீசியாவுக்குத் தெரிவித்துள்ளது. நேற்று மாலை நான்கு மணி யளவில் 24 மணி நேரத்துக்கான காற்றின் மாசு தரக் குறியீடு சுகாதாரமற்ற எல்லையைத் தொட்டது. அடுத்த 24 மணி நேரத்துக்கு அது தொடர்ந்து சுகாதாரமற்ற நிலையிலேயே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. "மேற்கிலிருந்து காற்று வீசும் என முன்னுரைக்கப்பட்டுள்ளதால் இரவு நேரத்தில் புகைமூட்டம் அதிகம் கொண்ட காற்று சுமத்ரா பகுதியில் இருந்து வீசக்கூடும். அதனால் காற்றின் தரம் மேலும் மோசமடையக்கூடும்," என தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்தது.
தேசிய சுற்றுப்புற வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இந்தோனீசியாவின் சுற்றுப்புற வாரியத் தலைமை நிர்வாக அதிகாரிக்கு எழுதிய கடிதத்தில் புகைமூட்டம் குறித்த சிங்கப்பூரின் அக்கறையைப் பதிவு செய்தார். வறண்ட இந்தக் காலகட்டத்தில் தீயைத் தவிர்ப்பது, மட்டுப் படுத்துவது ஆகியவற்றுக்குத் தேவையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்ளுமாறு இந்தோனீசியாவை வலியுறுத்தியதாக சிங்கப்பூரின் தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்தது. நேற்று மாலை 6 மணி நில வரப்படி 24 மணி நேரத்துக்கான காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு 82க்கும் 112க்கும் இடைப்பட்டு இருந்ததாக தேசிய சுற்றுப்புற வாரியத்தின் இணையப்பக்கம் தெரிவித்தது.