சமய உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக பதின்ம வயது வலைப்பதிவாளர் ஏமஸ் யீக்கு ஆறு வாரச் சிறைத் தண்டனையும் $2,000 அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது. இதே குற்றச்செயலுக்காக அவருக்கு 15 மாதங்களுக்கு முன்பாக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அந்த 17 வயது இளைஞர் எட்டு குற்றச்சாட்டுகளின் பேரில் இப்போது தண்டனை பெற்றிருக்கிறார்.
போலிஸ் நிலையத்திற்குப் போகத் தவறிவிட்டார் என்று கூறும் இரண்டு குற்றச்சாட்டுகள், முஸ்லிம்கள் மற்றும் அல்லது கிறிஸ்துவர்களின் உணர்வுகளை வேண்டுமென்றே புண்படுத்தியதகாகக் கூறும் ஆறு குற்றச்சாட்டுகள் ஆகிய வற்றின் பேரில் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அபராதத்தைச் செலுத்தவில்லை என்றால் யீ மேலும் 10 நாள் சிறையில் இருக்க வேண்டும். தண்டனை அக்டோபர் 13ஆம் தேதி தொடங்கும். வலைப்பதிவாளர் சார்பில் வழக்கறிஞர் என் கனகவிஜயன் முன்னிலையானார்.
தன்னுடைய எல்லா செய்கைகளையும் நினைத்து தம் கட்சிக்காரர் மிகவும் வருந்துவதாக வழக்கறிஞர் வாதிட்டார். இந்த இளைஞர், சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் இயூ மரணம் அடைந்ததற்கு நான்கு நாள் கழித்து ஒரு காணொளியை இணையத்தில் பதிவேற்றினார். பிறகு அவர் தனது வலைப்பக்கத்தில் ஆபாசப் படம் ஒன்றையும் பதிவேற்றினார். 2015 மே 12ஆம் தேதி குற்றவாளி என்று யீ தீர்மானிக்கப்பட்டார். அவருக்கு நான்கு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.