ஐந்து நாட்டுத் தற்காப்பு உடன்பாட்டின் உறுப்பிய நாடுகளைச் சேர்ந்த தற்காப்புப் படைத் தலைவர்கள் நேற்று நடைபெற்ற மாநாட்டில் தங்கள் கடப்பாட்டை மறுஉறுதி செய்துள்ளனர். சிங்கப்பூர், மலேசியா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய ஐந்து நாடுகளைச் சேர்ந்த தற்காப்புப் படைத் தலைவர்கள் வட்டார ஒத்துழைப்பையும் பாதுகாப்பையும் மேம்படுத்துவதில் ஐந்து நாட்டுத் தற்காப்பு உடன்பாடு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை வலியுறுத்தியதாகத் தற்காப்பு அமைச்சு அறிக்கை வெளியிட்டது.
ஐந்து நாட்டுத் தற்காப்பு உடன்பாட்டின் தற்காப்புப் படைத் தலைவர்களுக்கான 17வது மாநாடு நேற்று தொடங்கி இன்று நிறைவடைகிறது. இந்த மாநாடு சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் மாறி மாறி நடத்தப்படுகிறது. இம்முறை இந்த மாநாடு சிங்கப்பூரில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தற்காப்புப் படைத் தலைவர்கள் கலந்துகொண்டு கருத்துப் பரிமாற்றங்களில் ஈடுபடுவர்.
மாநாட்டில் சந்தித்துப் பேசிய தற்காப்புப் படைத் தலைவர்கள். படம்: www.gov.sg