இளம் தம்பதியர் பிள்ளைகள் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக முன்கூட்டியே வீடுகளைப் பெற இயலவில்லை என்பது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த தேசிய மக்கள்தொகை, திறனாளர் பிரிவுக்குப் பொறுப்பு வகிக்கும் மூத்த துணை அமைச்சர் ஜோசஃபின் டியோ, பிள்ளை பெற்றுக்கொள்வதைத் தள்ளிப்போட்டால் பெண்களுக்கே உரிய மாதவிடாய், நீர்க்கட்டி போன்ற பிரச்சினைகளால் அது சாத்தியமாகாமல் போனாலும் போகலாம். அதனால் வீடு கிடைத்த பிறகு பிள்ளை பெற்றுக்கொள்ளலாம் என்பது போன்ற எந்தவொரு காரணத்திற்காகவும் பிள்ளை பெறுவதைத் தள்ளிப்போடத் தேவையில்லை என்று கூறியுள்ளார். இதன் தொடர்பில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நேற்று நடத்திய இணையம்வழி கருத்துச் சேகரிப்பில் கிடைத்த சுமார் 14,000 பதில்களில் 93% பிள்ளைப்பேற்றுக்கு முன்பு வீடு வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பெற்றோர் முன்னுரிமைத் திட்டத்தின்கீழ், கருவுற்றிருக்கும் தம்பதி அல்லது 16 வயதுக்குட்பட்ட பிள்ளைகளை உடைய தம்பதிக்கு வீடு வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும். ஆனால் சிலர் வீடு கிடைத்த பிறகே பிள்ளை பெற்றுக் கொள்ள விரும்புகின்றனர். திருமணம், பெற்றோராவது தொடர்பான குழந்தையின்மை உள்ளிட்ட பல கேள்விகளுக்கு சென்ற வாரம் பேட்டி ஒன்றில் திருவாட்டி டியோ பதிலளித்தார். பிரான்ஸ், ஐரோப்பா போன்ற நாடுகளில் பிள்ளை பெற்றுக்கொள்ளும் கலாசாரத்திற்கும் சிங்கப்பூரில் திருமணம், குழந்தை பிறப்பு கலாசாரத்திற்கும் இடையே உள்ள வேறுபாடுகளையும் அவர் அப்போது குறிப்பிட்டார்.
ஈராண்டுகளுக்குள் பிள்ளை பெற்றுக்கொள்வதாக அறிவித்து தம்பதியர் முதலில் வீட்டைப் பெறும் யோசனை குறித்துப் பேசுகையில், ஒருவேளை அவர்கள் கருவுற இயலாமல் போனால் அவர்களிடமிருந்து வீட்டைத் திருப்பி எடுத்துக்கொள்வது முறையாகுமா என்று கேட்டார் அவர். மேம்பாட்டு வாய்ப்புகள், வேலை போன்றவற்றைத் தேடிச் செல்வதுபோல காதல், திருமணம் போன்றவற்றை சிங்கப்பூரர்களில் பலர் தேடிச் செல்வதில்லை. 'அது நடக்கும்போது நடக்கட்டும்' என்றிருக்கின்றனர் என்று பொதுவான போக்கையும் அவர் குறிப்பிட்டார்.