'மைக்ரோ 2000 டெக்னாலஜி' நிறுவனத்தைச் சேர்ந்த இரு ஊழியர்கள் மீது நேற்று நீதிமன்றத்தில் லஞ்ச ஊழல் குற்றச் சாட்டு சுமத்தப்பட்டது. அந்நிறுவனத்தின் முன்னைய வாடிக்கையாளர் சேவை அலுவலர்களின் அணித் தலைவ ரான இங் ஜுன் சியாங் என்பவர் $238,530 தொகையை லஞ்சமாகப் பெற்றதாக அவர் மீது 26 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஐபோன் கைபேசிகளை மாற்றித் தருவது தொடர்பில் நிறுவனத்தின் நடைமுறை விதிகளுக்கு முரணாகச் செயல்பட்ட அதிகாரிகள் பற்றி மேலிடத்தில் தெரிவிக்காமல் இருப்பதற்காக அவர் அந்தப் பணத்தைப் பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
மற்றோர் ஊழியரான டான் கிம் சோங் டோனி என்பவரும் வாடிக்கையாளர் அலுவலர் அணித் தலைவராகப் பணியாற்றியபோது 18,750 வெள்ளியை லஞ்சமாகப் பெற்றார் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அவர் மீது 22 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஏற்கெனவே 'மைக்ரோ 2000 டெக்னாலஜி' நிறுவனத்தைச் சேர்ந்த ஆறு பேர் மீது கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு செப்டம்பர் 15ஆம் தேதி தண்டனை விதிக்கப்பட்டது. $900 முதல் $12,000 வரை யிலான அபராதம் அவர்களுக்கு விதிக்கப்பட்டது.