சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை நாளை திங்கட்கிழமையும் மறுநாள் செவ்வாய்க்கிழமையும் நாடளாவிய முறையில் பயங்கர வாதச் சமாளிப்புப் பயிற்சியை நடத்துகிறது. குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம், சிங்கப்பூர் ஆயுதப் படைகள், மக்கள் கழகம் ஆகிய வற்றின் ஆதரவுடன் இந்தப் பயிற்சியை குடிமைத் தற்காப்புப் படை நடத்துகிறது. பயங்கரவாதத் தாக்குதல் நடக்கும்போது சிங்கப்பூரின் பலதரப்பு சமாளிப்புத் திட்டத்தைப் பரிசோதித்து அதனைச் சரிப் படுத்தும் முயற்சிகளை உள் துறைக் குழுவும் சிங்கப்பூர் ஆயுதப்படையும் தொடர்ந்து மேற் கொண்டு வருகின்றன.
அந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்தப் பயிற்சி நடக்கும் என்று நேற்று போலிஸ் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது. இப்போதைய பயங்கரவாத மிரட்டல் பற்றிய புரிந்துணர்வை பொதுமக்களிடையே அதிகப் படுத்தவும் பொதுமக்களைத் தொடர்ந்து விழிப்பு நிலையில் இருந்துவருமாறு ஊக்குவிக்கவும் இந்தப் பயிற்சி உதவும் என்று போலிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். பயிற்சி திங்கட் கிழமை முற்பகல் 10 மணி முதல் இரவு 10 வரையிலும் அடுத்த நாளன்று இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரையிலும் நடக்கும். முதல் கட்டத்தில் எம்ஆர்டி நிலையங்கள் போன்ற பொது இடங்களில் போலிஸ், ஆயுதப் படை அதிகாரிகள் கூட்டுச் சுற்றுக்காவல்களை மேற்கொள்வார்கள்.
குடிநுழைவுத் துறை அதிகாரிகளும் ஆயுதப்படை அதிகாரிகளும் தரைவழி சோதனைச் சாவடிகளில் கூட்டாகச் சுற்றுக்காவல் புரிவார்கள். இரண்டாம் கட்டத்தில் வெற்று வேட்டுகளும் வாணவெடிகளும் புகையை கிளப்பும் சாதனங்களும் பல்வேறு இடங்களில் பயன்படுத் தப்பட்டு பயிற்சி நடக்கும். பயிற்சி நடக்கும் இடங்களில் அதற்கான அறிவிப்புகள் இடம்பெற்றிருக்கும். பயிற்சி நடக்கும் இடமும் சுற்றி வளைக்கப்பட்டிருக்கும்.