தமது ஐந்து வயது மகன் மீது தொடர்ந்து வெந்நீரை வாரியடித்தார் 24 வயது தந்தை. அவர் அந்தச் செயலை கடந்த சனிக்கிழமை நண்பகல் 12 மணிக்கும் இரவு 8.48 மணிக்கும் இடையே புரிந்துள்ளார். கேகே மகளிர், சிறார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட அச்சிறுவன் அடுத்த நாள் மாண்டான். மிகுந்த சூடான பொருளால் கடும் காயத்தை விளைவித்தார் என்ற குற்றச் சாட்டு நேற்று முன்தினம் அந்தத் தந்தையின் மீது சுமத்தப் பட்டது. தோ பாயோவில் உள்ள புளோக்கின் 10வது மாடியில் உள்ள வீட்டில் தந்தை பல முறை அச்சிறுவன் மீது இரக்க மின்றி இக்குற்றத்தைப் புரிந்தார் என்று நீதிமன்றத்தில் சொல்லப்பட்டது.
சிறுவனின் அடையாளத்தைப் பாதுகாக்கும் பொருட்டு, தந்தை, மகன் இருவரது பெயரையும் வெளியிட இயலாது. குற்றத்தின் கூடுதல் விவரங்கள் எதுவும் தந்தையின் குற்றப் பத்திரிகையில் குறிப்பிடப்படவில்லை. விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ள தந்தை இம்மாதம் 31ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார். மரணமடைந்த சிறுவனுக்கு மூன்று உடன்பிறப்புகள் உள்ளனர் என்று தி நியூ பேப்பர் செய்தி வெளியிட்டிருந்தது. அந்தக் குடும்பம் தோ பாயோ வாடகை வீட்டுக்கு ஈராண்டுகளுக்கு முன் குடி வந்தனர்.
சிறுவனின் மூன்று உடன்பிறப்புகளும் குழந்தைப் பாதுகாப்புச் சேவையின் கீழ் தற்காலிகமாக ஒரு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு தெரிவித்தது. அந்தப் பிள்ளைகளின் பாதுகாப்பையும் நல்வாழ்வையும் உறுதி செய்ய, அவர்களின் குடும்பத்தினருடனும் துறை நிபுணர்களுடனும் அமைச்சு அணுக்கமாகப் பணியாற்றி வருகிறது. தந்தையின் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஆயுள் தண்டனை அல்லது 15 ஆண்டு வரையிலான சிறை அல்லது அபராதமும் பிரம்படியும் விதிக்கப்படலாம்.