சிறப்புத் தேவையுடையோருக்கு ஆதரவாக நேற்று ஆயிரக்கணக் கானோர் சன்டெக் சிட்டியில் ஒன்று திரண்டனர். ஊதா அணிவகுப்பு ('பர்ப்பள் பரேட்') என அழைக்கப்படும் இந்த இயக்கத்தில் கலந்துகொள்ள, மழையையும் பொருட்படுத்தாமல் கிட்டத்தட்ட 10,000 பேர் நேற்று ஊதா நிற ஆடைகளில் சன்டெக் சிட்டிக்கு வந்திருந்தனர். சிலர் ஊதா நிற காகித தொப்பிகளையும் அணிந்து வந்தனர்.
உடல் குறை, கற்றல் குறைபாடு போன்ற சிறப்புத் தேவை உடையோருக்கு ஆதரவாக சிங்கப்பூரில் நடைபெறும் ஆகப் பெரிய விழிப்புணர்வு இயக்கம் ஊதா அணி வகுப்பு. கடந்த மூன்று ஆண்டுகளாக இது ஹொங் லிம் பூங்காவில் நடைபெற்றது. கடந்த 2013ஆம் ஆண்டு கிட்டத்தட்ட 3,000 பேர் இந்த இயக்கத்துக்கு ஆதரவாக வந்திருந்தனர். பின்னர் 2014ஆம் ஆண்டு 5,000 பேரையும் கடந்த ஆண்டு 7,000 பேரையும் இவ்வியக்கம் ஈர்த்தது.
சன்டெக் சிட்டியில் நடைபெற்ற ஊதா அணிவகுப்பு இயக்கத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம் இயக்கத்துக்கு ஆதரவாக ஊதா நிற டி=சட்டையில் வந்திருந்தார். படம்: பெரித்தா ஹரியான்