தைரியத்துடன், உறுதியாக தலைமை தாங்குவதுடன் மக்களுடன் தொடர்புகொள்வது, நாட்டை வழிநடத்திச் செல்ல ஏதுவாக மக்கள் மனதில் இடம்பிடிப்பது போன்ற பண்புகளைக் கொண்டவராக சிங்கப்பூரின் எதிர்காலப் பிரதமர் இருக்கவேண்டும் என உள்துறை, சட்ட அமைச்சர் கா சண்முகம் கூறியுள்ளார். சிங்கப்பூர் வாகன உரிமையாளர் சங்கத்தின் புதிய கட்டடத்துக்கான நில அகழ்வு நிகழ்ச்சியில் நேற்று முன்தினம் பங்கேற்ற திரு சண்முகம் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.
பிரதமர் திரு லீ சியன் லூங் தமது கால அட்ட வணையைத் தயாரித்து இருப்பதாகவும் அவர் சொன்னார். மேலும், "அடுத்த தலைமுறைத் தலைவர்களைத் தேர்ந் தெடுத்துள்ளோம். அடுத்த தலைமுறை அமைச்சர்கள் தங்களை வழிநடத்துபவரைத் தேர்ந்தெடுப்பார்கள்," என்றும் அவர் குறிப்பிட்டர்.
பிரதமரிடம் சிங்கப்பூரின் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதன் தொடர்பில் அண்மையில் கேட்கப்பட்ட கேள்விக்கு, அடுத்த தலைமுறைத் தலைவர்கள் தயாராக இருப்பதாகவும் அடுத்த தலைமுறை அமைச்சர்கள் தங்கள் தலைவரைத் தேர்ந்தெடுப்பார்கள் எனவும் கூறியிருந்தார். அடுத்த பிரதமர் பதவிக்கு அடையாளம் காணப்பட்டிருக்கும் சிலரில் பிரதமர் அலுவலக அமைச்சர் சான் சுன் சிங், நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட், கல்வி அமைச்சர்கள் இங் சீ மெங், ஓங் யி காங், சமுதாய குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டான் சுவான் ஜின், தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் ஆகியோர் அடங்குவர்.