பாலியல் பலாத்காரம், கொள்ளை ஆகிய குற்றங்களின் பேரில் 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஆடவரின் மேல் முறையீடு ஏற்கப்பட்டு தண்டனை காலம் 15 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டுள்ளது. சாங் கார் மெங்குக்கு முதலில் விதிக்கப்பட்ட தண்டனை அவர் புரிந்த மோசமான குற்றத்துக்குக் கிடைத்த நியாயமான தண்டனை என்றபோதிலும் அதே போன்ற குற்றங்களுக்கு ஏற்கெனவே 11லிருந்து 15 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியதை மேல்முறையீட்டு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதாகத் தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் தெரிவித்தார்.
சிறைத் தண்டனை குறைக்கப்பட்டுள்ளபோதிலும் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த 24 பிரம்படிகளில் மாற்றமில்லை. 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் தேதியன்று மலேசியரான 29 வயது சாங், 37 வயது வியட்னாமிய பெண்ணைச் சுயநினைவு இழக்கும் வரை அடித்து, பாலியல் பலாத்காரம் செய்து, அவரது உடைமைகளைக் கொள்ளையடித்தார்.