புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோவில் குடமுழுக்கை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற கோல்ஃப் போட்டி, விருந்து நிகழ்ச்சி மூலம் கிட்டத்தட்ட $380,000 நிதி திரட்டப்பட்டது. யீஷூன் தொழிற்பூங்காவில் அமைந்திருக்கும் இவ்வாலயத்தில் மூலவர் சன்னதி, நிகழ்ச்சி நடைபெறும் கூடம் ஆகியவற்றின் வசதிகளை மேம்படுத்த ஆலய நிர்வாகக் குழு புதுப்பிப்புப் பணிகளைத் தொடங்கி உள்ளது. அந்தத் திருப்பணிகளுக்கு நிதி திரட்டும் முயற்சியாக நேற்று முன் தினம் 'ஆர்க்கிட் கண்ட்ரி கிளப்'பில் 'கோல்ஃப்' விளையாட்டுப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அதே இடத்தில் மாலை விருந்து நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.
எம்எம்ஐ குழுமத்தின் தலைவரும் தலைமை நிர்வாகியுமான டாக்டர் சந்துருவின் தலைமையில் இவ்விரு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யப்பட்டன. விருந்து நிகழ்ச்சியில் கல்வி (உயர்கல்வி, திறன்கள்) அமைச்சரும் தற்காப்பு இரண்டாம் அமைச்சருமான திரு ஓங் யி காங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். கோல்ஃப் போட்டியில் கிட்டத்தட்ட 100 கோல்ஃப் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். இந்தியர்களும் இந்தியர் அல்லாதவர்களும் இப்போட்டியில் கலந்து கொண்டனர். அதன் பிறகு ஆர்க்கிட் கண்ட்ரி கிளப்பின் பிரதான அறையில் மாலையில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 800 பேர் கலந்துகொண்டனர். ஆலயத்தின் குடமுழுக்கு திருவிழா 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி நடைபெறும்.
விருந்து நிகழ்ச்சியில் ஆலயத்தின் சின்னத்தை அறிமுகப்படுத்தும் (வலமிருந்து) டாக்டர் சந்துரு கல்வி அமைச்சர் ஓங் யி காங், இந்து அறக்கட்டளை வாரிய தலைவர் திரு ஆர். ஜெயசந்திரன், புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயத் தலைவர் திரு இ. நாராயணசாமி, சிண்டா தலைமை நிர்வாக அதிகாரி திரு கே. பரதன். படம்: புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயம்