கைதியிடமிருந்து லஞ்சம் வாங்கியதாக சிறை அதிகாரி மீது எட்டு குற்றச்சாட்டுகள் பதிவாகி உள்ளன. இந்தக் குற்றங்களை 50 வயது கோபி கிருஷ்ணன் அய்யாவு 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் வரை சாங்கி சிறைச்சாலையில் புரிந்ததாகக் கூறப்படுகிறது. சோங் கெங் சாய் என்ற கைதியிடமிருந்து கடன் வடிவில் மொத்தம் 70,000 வெள்ளி லஞ்சமாகப் பெற கோபி கிருஷ்ணன் முயன்றதாக நம்பப்படுகிறது. கைதியிடமிருந்து 11,000 வெள்ளி ரொக்கம் பொறவும் மூத்த சிறை அதிகாரியான கோபி கிருஷ்ணன் முயற்சி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சாங்கி சிறைச்சாலையின் ஏ1 குழுமத்திலிருந்து வேறொரு பகுதிக்கு இடமாற கோ முன்வைத்த கோரிக்கையை நிறைவேற்ற கோபி கிருஷ்ணன் லஞ்சம் வாங்க முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது. கோபி கிருஷ்ணனின் வழக்கு அடுத்த மாதம் 3ஆம் தேதி நீதிமன்றத்துக்கு வருகிறது. "ஊழல் குற்றங்களை சிங்கப்பூர் ஒருபோதும் சகித்துக்கொள்ளாது. ஊழல் விவகாரங்களை ஊழல், லஞ்ச ஒழிப்புப் புலனாய்வுத் துறை கடுமையாகக் கருதுகிறது. ஊழல் குற்றம் புரிபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அது தயங்காது," என்று ஊழல், லஞ்ச ஒழிப்புப் புலனாய்வுத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் கோபி கிருஷ்ணனுக்கு ஒவ்வொரு குற்றச்சாட்டின் அடிப்படையில் ஐந்தாண்டுகள் வரை சிறைத் தண்டனையும் 100,000 வெள்ளி வரை அபராதமும் விதிக்கப்படலாம்.
நீதிமன்றத்தைவிட்டு வெளியே வந்ததும் செய்தியாளர்களைத் தவிர்த்த கோபி கிருஷ்ணன் அய்யாவு. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்