பிரபல சிகை அலங்கார நிபுணரான 46 வயது திரு அடி லீயிடம் இருந்து $42,034 மதிப்புள்ள பொருட்களைத் திருடிய குற்றத்திற்காக இந்தோனீசியப் பணிப்பெண் 40 வயது நமியா நூருலியாவுக்கு நேற்று ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மோன்சூன் குரூப் ஹோல்டிங்சின் நிறுவனரும் தலைவருமான திரு அடி லீயின் செந்தோசா கோவ் இல்லத்திலிருந்து இந்த ஆண்டு பிப்ரவரி முதல் மே மாதம் வரையிலான காலகட்டத்தில் நமியா நான்கு முறை பொருட்களைத் திருடியுள்ளார். நான்கு திருட்டுக் குற்றங்களில் மூன்றை நமியா ஒப்புக்கொண்டார்.
திரு அடி லீயும் அவரது பிரத்திதேய உரிமையாளரும் வெளிநாடு சென்றிருந்த நேரங்களில் விலையுயர்ந்த பயணப் பைகள், காலணிகள், கைப்பைகள், கைத்தொலைபேசி போன்றவற்றைத் திருடி, அவற்றை இந்தோனீசியாவுக்கு நமியா அனுப்பியுள்ளார். திருட்டுச் சம்பவம் பற்றித் தெரியவந்ததும் நமியா தமது மகளிடம் அந்தப் பொருட்களைத் திருப்பி அனுப்புமாறு கூறியுள்ளார். ஆனால் சிலபொருட்கள் விற்கப் பட்டுவிட்டதால் $28,350 மதிப்புள்ள பொருட்கள் மட்டுமே மீட்கப்பட்டன. ஒவ்வொரு குற்றத்திற்கும் அதிகபட்சமாக ஏழாண்டு சிறையும் அபராதமும் விதிக்கப்படலாம்.