வயதான காலத்தில் தனிமையால் பாதிக்கப்படும் முதியவர்கள் பலர் உள்ளனர்.
தங்களின் பிள்ளைகளின் வேலை காரணமாகவோ இதர பல சூழ்நிலைகள் காரணமாகவோ தனிமை என்பது இயல்பான ஒன்றாகிவிடுகிறது.
ஆனால் இதுபோன்ற சூழ்நிலை யால் பாதிப்படையும் முதியவர்களைத் தனிமையிலிருந்து மீட்பதே சமூக நட்புறவுத் திட்டத்தின் நோக்கமாகும்.
தனிமையால் பாதிக்கப்படும் இந்த மூத்தோருக்கு உதவும் தொண்டூழியர்களும் முதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தனியாக வசிக்கும் 69 வயது திருவாட்டி மேரி பேபி ஏஷம்மாள் சமூக நட்புறவுத் திட்டத்தால் பலனடைந்தவர்களில் ஒருவர்.
அவருக்கு உறுதுணையாக இருந்த தொண்டூழியர் 65 வயது திருவாட்டி குளோரி தேவநேசம். பல ஆண்டுகளுக்கும் முன்னர் ஒரே தேவாலயத்திற்குச் சென்ற வகையில் இருவரும் அறிமுகமாகினர்.
கடந்த இரண்டு ஆண்டுக ளாக முதியோர் நடவடிக்கை மையத்தின் செயல்பாடுகளில் ஈடு பட்டுவரும் திருவாட்டி குளோரி, தமது ஈடுபாடு பற்றிய தகவல்களை மற்ற மூத்த குடிமக்களுடன் பகிர்ந்துகொண்டார்.
அப்போது திருவாட்டி மேரியைச் சந்தித்த திருமதிக் குளோரி, தனியாக வசித்து வரும் திருவாட்டி மேரி உடன் நட்புறவுக் கொண்டு பல நடவடிக்கைகளில் அவரை ஈடுபடுத்தினார்.
உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையிலும் திருவாட்டி மேரி உற்சாகத்துடன் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
"தனிமையில் வாழ்வது மட்டும் அல்லாமல் கூச்ச சுபாவம் உடையவர் திருவாட்டி மேரி. ஆனால் அவர் முதியோர் நடவடிக்கை மையத்தில் ஒருங்கிணைக்கப்படும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தற்போது குதூகலத்துடன் பலருடன் பழகி வருகிறார்," என்று பெருமிதம் கொண்டார் திருவாட்டி குளோரி.
சிங்கப்பூரில் மக்கள்தொகை மூப்படைந்துவரும் வேளையில் முதியவர்களில் பலர் சிரமங்களை எதிர்நோக்க நேரிடும். அவர்களது தேவைகளும் மாறிவரும்.
மூத்த தொண்டூழியர்களே மற்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் இதுபோன்ற திட்டத்தால் வயதான காலத்தை இன்பத்துடன் கழிக்க இயலும் என்பது திருவாட்டி குளோரியின் கருத்தாகும்.
மூன்று வயது பேத்தியைப் பரா மரித்து வரும் திருவாட்டி குளோரியால் முன்புபோல் தினந்தோறும் நண்பர்களைச் சந்திக்க முடிய வில்லை. இருந்தாலும் தம்மால் முடிந்த நாட்களில் எல்லாம் அவர் தமது தொண்டூழியப் பணியை செய்து வருகிறார்.
மேலும் தமது பேத்தியையும் சில நடவடிக்கைகளுக்கு அழைத்துச் செல்கிறார்.
வெவ்வேறு தலைமுறையினருக் கிடையே கலந்துறவாடும் வாய்ப்பு இதன்மூலம் கிடைக்கும் என்பது அவரது கண்ணோட்டம்.
இரு மகன்களுக்குத் தாயாக வும் நான்கு பேரப்பிள்ளைகளுக்குப் பாட்டியாகவும் உள்ள திருவாட்டி மேரி, இந்தச் சமூக நட்புறவுத் திட்டத்தால் அதிகளவில் பலன் பெற்றதாகக் குறிப்பிட்டார்.
வாரத்திற்கு ஐந்து முறையாவது அவர் வசிக்கும் வீட்டின் கீழ்த்தளத்தில் அமைந்துள்ள ஃபெய் யுவே சமூக சேவை மையத்திற்குச் செல்வது அவருக்கு வழக்கமாகி விட்டது.
உடற்பயிற்சி, கைவேலை வகுப்புகள், சுற்றுலா என அந்த மையத்தில் ஒருங்கிணைக்கப்படும் நிகழ்ச்சிகள் பலவற்றிலும் உத்வேகத்துடன் பங்கேற்கிறார் அவர்.
"எனக்கு இப்போது நிறைய நண்பர்கள் உள்ளனர். அனைவரும் என்னை அரவணைத்து என்னைப் பார்த்துக்கொள்கின்றனர்," என்று மட்டற்ற மகிழ்ச்சியுடன் கூறினார் திருவாட்டி மேரி.
சமூக நட்புறவுத் திட்டத்தால் முதியவர்களிடையே பிணைப்பு வலுப்படுகிறது.
சுறுசுறுப்பான வாழ்க்கைமுறையும் துடிப்பான மூப்படைதலும் இந்தத் திட்டத்தால் ஏற்படும் பயன்கள் என்றால் அது மிகையல்ல.