மக்கள் செயல் கட்சி நகர மன்றங்கள் வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்புகளில் 17,000க்கும் அதிகமான மின்தூக்கிகளைக் கூடுதல் பாதுகாப்புக்காக நவீனப்படுத்தவுள்ளன. இந்தப் பணிகள் அடுத்து வரும் 15 மாதங்களில் தொடங்கும் என்று மக்கள் செயல் கட்சியின் 15 நகர மன்றங்களும் இணைந்து வெளியிட்ட அறிக்கை கூறியது.
$450 மில்லியன் வெள்ளி மதிப்புள்ள மேம்பாட்டுத் திட்டத்தை இந்த நகர மன்றங்கள் உறுதி செய்திருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மின்தூக்கிக்கான திட்டங்களை மக்கள் செயல் கட்சியின் 'மின்தூக்கி செயற்குழு' மறுஆய்வு செய்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
2016ஆம் ஆண்டில் "எல்யுபி" எனப்படும் மின்தூக்கி மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்படுவதாக வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் அறிவித்தது. இந்தத் திட்டம், கட்டடக், கட்டுமான ஆணையம் பரிந்துரைத்த பாகங்களை மின்தூக்கிகளில் பொருத்த நகர மன்றங்களுக்கு ஆதரவு அளிக்கிறது. மின்தூக்கிகள் செல்லும் வேகத்தைக் கணிக்கவும் கட்டுப்பாட்டில் இல்லாத அசைவுகளைக் கண்டுபிடிக்கவும் பயன்படுத்தப்படும் கருவிகள், மின்சாரத் தடையின்போது தானாக இயங்கக்கூடிய பாதுகாப்புக் கருவி ஆகியன கட்டடக், கட்டுமான ஆணையம் பரிந்துரைத்திருக்கும் மின்தூக்கி பாகங்களில் சில.
கிட்டத்தட்ட $450 மில்லியன் வெள்ளி மதிப்பிலான இத்திட்டத்தால், தற்போது உள்ள 24,000 வீவக மின்தூக்கிகளில் 20,000 மின்தூக்கிகள் பயனடையும் என்று அரசாங்கம் பின்னர் அறிவித்தது.