கழிவுப்பொருட்களை வீணாக்காமல் அதனை மறுபயனீடு செய்யும் வழி ஒன்றைப் பொதுப் பயனீட்டுக் கழகமும் தேசிய சுற்றுப்புற வாரியமும் கண்டுபிடித்துள்ளன. கழிவறையிலிருந்து வெளியாகும் கழிவுப் பொருட்களையும் வீணாக்கப்படும் மிச்சமீத உணவுப் பொருட்களையும் இணைத்து 'பயோகேஸ்' எனப்படும் உயிரி வாயுவை உற்பத்தி செய்யும் முறையை இந்த அமைப்புகள் உருவாக்கியுள்ளதாக 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' நாளிதழ் தெரிவித்திருக்கிறது.
இதற்கு முன்னதாக உயிரி வாயுவை உற்பத்தி செய்ய இந்தப் பொருட்கள் தனித்தனியாகப் பயன்படுத்தப்பட்டன. ஆனால் இவை இணைந்து பயன்படுத்தப்படும்போது, உயிரி வாயுவின் உற்பத்தி மூன்று மடங்கு அதிகரித்தது. இதற்கான சோதனை 2016ஆம் ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. மாஜு ராணுவ முகாம், தேசிய பல்கலைக்கழகம், டியன் ஷெங் உணவு விநியோக நிறுவனம் உள்ளிட்ட இடங்களிலிருந்து நாள்தோறும் இரண்டு லாரிகள், கழிவுப்பொருட்களை ஓல்ட் டோ டக் ரோட்டிலுள்ள பொதுப் பயனீட்டுக் கழகத்தின் சோதனை நிலையத்திற்குக் கொண்டு சென்றன. இந்தக் கழிவுப்பொருட்களைக் கொண்டு உயிரி வாயுவை உற்பத்தி செய்வதற்கான முறை அந்நிலையத்தில் சோதிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் தண்ணீர் சுத்திகரிப்புக்கான எரிபொருள் தேவையை இந்த முறை நிறைவுசெய்யும் என்று இந்த அமைப்புகள் கூறின.
சிங்கப்பூர் தனது எரிபொருள் தேவையைச் சுயமாக நிறைவேற்ற இந்த முறை உதவலாம் என்று தேசிய சுற்றுப்புற வாரியத்தின் தலைவர் திரு டான் மெங் டுய் தெரிவித்தார். சிங்கப்பூரின் ஒட்டுமொத்த மறுசுழற்சி விகிதம் 60 விழுக்காடாக இருந்தபோதும் உணவு கழிவுப்பொருட்களில் 16 விழுக்காடு மட்டுமே மறுபயனீடு செய்யப்படுவதாகவும் அவர் கூறினார்.
தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதன் மூலம் உணவு வீணாக்கப்படுவதைக் குறைப்பதற்கும் அவ்வாறு வீணாக்கப்படும் உணவுகளை மறுசுழற்சி செய்வதற்கும் நிறைய வாய்ப்புகள் இருப்பதாக திரு டான் கூறினார். இத்தகைய தொழில்நுட்பங்களால் உணவுக் கழிவுகள் உயிரி வாயு உள்ளிட்ட உயர் மதிப்புள்ள பொருட்களாக மாற்றப்படலாம் என்றும் அவர் சொன்னார்.