எதிர்வரும் வரவு செலவுத் திட்டம் சிங்கப்பூரைப் பாதுகாப்பாக வைத்திருப்பதுடன் ஊழியர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருவதற்கும் உதவும் என்று நிதியமைச்சர் ஹெங் சுவீ கியட் நேற்று தெரிவித்தார்.
ஊழியர்கள் தங்களது திறன்களை மேம்படுத்திக்கொள்ளவும், நிறுவனங்கள் வருங்காலத்தில் போட்டித்தன்மையுடன் இருக்க ஆற்றலை வளர்த்துக்கொள்ளவும் உதவும் முனைப்புகள் இத்திட்டத்தில் உள்ளடங்குவதாகத் திரு ஹெங் கூறினார். "அதே வேளையில் சிங்கப்பூரின் சுற்றுப்புறம், வாழ்க்கைத் தரம் ஆகியனவும் கவனிக்கப்படவேண்டும். எனவே இந்தத் திட்டம் விரிவான நோக்கத்தைக் கொண்டுள்ளது," என்றும் அவர் கூறினார்.
இம்மாதம் 18ஆம் தேதி வரவு செலவுத் திட்ட உரையை ஆற்றவிருக்கும் திரு ஹெங், மெர்டேக்கா தலைமுறையினருக்கான சலுகைத் திட்டம் குறித்த விவரங்களையும் வெளியிடவுள்ளார்.
கடல்துறை, துறைமுக ஆணையத்தின் பாசிர் பாஞ்சாங் துறைமுகத்தில் நேற்று நிகழ்ந்த சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது திரு ஹெங் செய்தியாளர்களிடம் பேசினார். அவருடன் வர்த்தக, தொழில், சுகாதார துணையமைச்சர் லாம் பின் மின்னும் தொழிற்சங்கத் தலைவர்களும் இருந்தனர்.
சிங்கப்பூரின் பொருளியல் குறித்து தாம் தொடர்ந்து நம்பிக்கையுடன் இருப்பதாகத் திரு ஹெங் தெரிவித்தார். "உலகப் பொருளியல் சூழலின் நிச்சயமின்மை அதிகமாக உள்ளது. பொருளியல் மெதுவடைவு ஓரளவுக்கு ஏற்படும் என்பதை நாம் எதிர்பார்க்கலாம். ஆயினும், நாம் நமது உருமாற்றத்தைத் தொடரவேண்டும். நல்ல முன்னேற்றத்தை அடைவோம் என்பது குறித்து நாம் நம்பிக்கையுடன் இருக்கவேண்டும்," என்றும் அவர் கூறினார்.