இரவல் கொடுத்த கைபேசிக்காக வாக்குவாதம் ஏற்பட்டு, தன் தோழியை 28 வயது சயது மஃப்பி ஹசான், ஓர் அடுக்குமாடி கார் நிறுத்துமிடத்தின் ஐந்தாவது தளத்திலிருந்து கீழே தூக்கி எறிந்தார். இதன் தொடர்பில் நேற்று முன்தினம் கொலைக் குற்றச்சாட்டை மஃப்பி நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதியன்று தோ பாயோவில் அமைந்துள்ள கார்நிறுத்தும் இடத்தில் இருவரும் சந்தித்துக் கைபேசியைப் பழுதுபார்க்கும் செலவு பற்றி பேசிக்கொண்டிருந்தபோது ஆத்திரத்தில் 23 வயது திருவாட்டி அத்திகா டொல்கிஃப்லியை வேலையில்லாத மஃப்பி படிக்கட்டிலிருந்து கீழே தள்ளிவிட்டார். அதில் திருவாட்டி அத்திகாவுக்குத் தலையில் அடிப்பட்டது. மயக்கநிலையில் இருந்தவரை மஃப்பி தரதரவென இழுத்துச் சென்று அவரைத் தூக்கிக் கீழே போட்டார். திருவாட்டி அத்திகாவின் அழுகிய சடலம் மூன்று நாட்களுக்குப் பின்னர் மூன்றாம் தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.