சிங்கப்பூர் நாணயத்தின் $50, $100 நோட்டுகளில் கள்ளப் பணம் பரிமாற்றம் பெறுவதாகவும் அந்த நோட்டுகளைப் பெறாமல் இருக்க விழிப்புடன் இருக்கும்படியும் போலிசார் எச்சரித்துள்ளனர்.
இவ்வாண்டு மார்ச் மாதம் முதல் மே வரையில் கடைகள், உணவகங்களிலில் அந்த நோட்டுகள் புழக்கத்தில் இருந்ததாகப் பல புகார்கள் வந்துள்ளதை அடுத்து போலிசார் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது புழக்கத்தில் உள்ள சிங்கப்பூரின் முதல் அதிபர் யூசுஃப் பின் இசாக்கின் முகம் பொறிக்கப்பட்டுள்ள நோட்டுகளில் அந்த கள்ளப் பணம் வந்துள்ளதாக அவர்கள் கூறினர்.
சென்ற மாதம் 25ஆம் தேதி முதல் இம்மாதம் 4ஆம் தேதி வரை 25 வயதுக்கும் 29 வயதுக்கும் இடைப்பட்ட மூன்று ஆடவர்கள் இந்தக் குற்றத்தின் தொடர்பில் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
ஒரே மாதிரியான ‘சீரியல்’ எண்களைக் கொண்ட நோட்டுகள் பிரதி எடுக்கப்பட்டுள்ளன என்றும் பாதுகாப்பு குறியீடுகள் அவற்றில் இருக்காது என்றும் போலிசார் கூறியுள்ளனர்.
கள்ள நோட்டுகளைத் தாங்கள் வைத்திருப்பதாகச் சந்தேகப்பட்டால் உடனே அருகில் உள்ள அக்கம்பக்க போலிஸ் நிலையத்தில் புகார் செய்யும்படி அறிவுறுத்தப்படுகிறது.
அவற்றை உங்களிடம் வழங்கும் நபர் அங்கிருந்தால் உடனே போலிசைத் தொடர்புகொள்ளவும்.
கள்ள நோட்டுகளைப் புழங்குவோர் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அபராதமும் தண்டனையாக அனுபவிக்க நேரிடும்.
அவற்றை வைத்திருப்போர் 15 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையை அனுபவிக்கக்கூடும்.