அடகுக்கடையில் கொள்ளையடிக்க முயற்சி செய்து, தன் வெட்டுக்கத்தி இரண்டாக உடைந்ததால் அங்கிருந்து ஓடிய ஆடவர், மறுநாள் போலிசிடம் சிக்கினார்.
பிடோக்கில் உள்ள 'வேல்யூமேக்ஸ்' அடகுக்கடையில் சென்ற வெள்ளிக்கிழமை அன்று கொள்ளையடிக்க முயன்ற அந்த 67 வயது ஆடவர், தன் ஆயுதம் உடைந்த காரணத்தால் அவ்விடத்திலிருந்து ஓடிவிட்டார்.
போலிஸ் கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டும் விசாரணை மூலமும் அதிகாரிகள் சந்தேக நபரை ஈசூனில் அடையாளம் கண்டு கைது செய்தனர். ஆயுதம் தாங்கிய கொள்ளை குற்றம் தொடர்பில் இன்று ஆடவர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆடவருக்கு இரண்டு முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.