சிங்கப்பூரின் 54ஆவது தேசிய தினத்தைக் கொண்டாடும் பிரம்மாண்ட அணிவகுப்பைக் காண கிட்டத்தட்ட 27,000 பேர் திரண்டுள்ளனர்.
மரினா பேயிலும் சிங்கப்பூர் ஆற்றுக்கு அருகிலும் பல்லாயிரம் பேர் திரண்டு கொண்டாட்ட உணர்வில் திளைத்துக்கொண்டிருக்கின்றனர். சிங்கப்பூர் ஆற்றின் வரலாற்று முக்கியத்துவத்தை அனுசரிக்கும் விதமாக அங்கு முதன்முறையாக வாணவேடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சிங்கப்பூரின் இருநூற்றாண்டு கொண்டாட்டத்துடன் கூடிய இந்த தேசிய தின அணிவகுப்பில் மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது, இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ, புருணையின் சுல்தான் ஹசானால் போல்கியா உள்ளிட்ட வெளிநாட்டுத் தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
அணிவகுப்புக்கு முன்னர், ‘அவர் சிங்கப்பூர்’ என்ற இவ்வாண்டின் தேசிய தினப் பாடலை 825 இளையர்கள் கொண்ட இசைக்குழு பாடி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினர். ‘அகடமி அஃப் ஸ்டார்ஸ்’, ‘டான்ஸ் பீபிள்’, ‘மார்ஷியல் ஹவுஸ்’ மற்றும் ‘டச்’ சமூக சேவைகள் அமைப்பு ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அந்தக் கலைஞர்கள்.
அதன் பிறகு சுமார் மூன்று கிலோமீட்டர் உயரத்திலிருந்து ஒன்பது வான்குடை சாகச வீரர்கள் தரையிறங்கினர்.
சிங்கப்பூரின் நாட்டுத் தலைவர் என்ற முறையில் அதிபர் ஹலிமா யாக்கோப் கலந்துகொள்ளும் இரண்டாவது தேசிய தின அணிவகுப்பாக இது உள்ளது. அதிபருக்கான 21 பீரங்கி மரியாதை கொடுக்கப்பட்ட பின்னர் திருவாட்டி ஹலிமா அணிவகுப்பைப் பார்வையிட்டார்.