இவ்வாண்டு வலுவான ஓய்வுகால நிதி ஆதாரங்களைப் பெற்றுள்ள ஆசிய நாடுகளின் வரிசையில் சிங்கப்பூர் முதல் மூன்று இடங்களில் இடம்பிடித்து முன்னிலை பெற்றுள்ளது. ஆனால் ஓய்வூதியம் பெறுவோரின் வாழ்க்கைத் தரத்தில் சிங்கப்பூர் பின்தங்கியுள்ளது.
ஓய்வுகால பாதுகாப்பு குறியீட்டு ஆண்டு அறிக்கையில் இந்த விவரங்கள் வெளியிடப்பட்டன.
ஒட்டுமொத்தமாக 44 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சிங்கப்பூர் தொடர்ந்து 28வது இடத்தைப் பிடித்துள்ளது.
ஆனால் ஓய்வுகால பாதுகாப்பை வழங்கும் ஆசிய நாடுகளின் வரிசையில் ஜப்பான், தென் கொரியாவுக்கு அடுத்ததாக சிங்கப்பூர் மூன்றாவது நிலையில் உள்ளது.
ஒட்டு மொத்த நாடுகளின் வரிசையில் ஜப்பான் 23வது இடத்திலும் தென்கொரியா 24வது இடத்திலும் உள்ளன.
ஒரு நாட்டின் நிதி நிலை, சேமிப்பு, முதலீடு, வாங்கும் சக்தி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஓய்வுகால நிதி மதிப்பிடப்படுகிறது. மகிழ்ச்சி, காற்றின் தரம், தண்ணீர், இயற்கை சூழ்நிலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் வாழ்க்கைத் தரத்தை நிர்ணயிப்பதில் கணக்கிடப்படுகின்றன. ஆனால் வாழ்க்கைத் தரத்தில் எந்தவொரு ஆசிய நாடும் முதல் 25 இடங்களில் இடம்பெறவில்லை.