கிட்டத்தட்ட 95 ஆண்டுகள் வரலாறு கொண்ட ஸ்ரீ லயன் சித்தி விநாயகர் கோயிலின் குடமுழுக்கு விழா இம்மாதம் 15ஆம் தேதி நடைபெறவுள்ளது.
கியோங் செய்க் சாலையில் அமைந்துள்ள இக்கோயிலில் கடந்த ஏழு மாதங்களாக ஏறக்குறைய $1 மில்லியன் செலவில் புதுப்பிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கோயிலின் கருங்கல் பதிக்கப்பட்ட தரை சீரமைக்கப்பட்டுள்ளது.
சக்கர நாற்காலிகளைப் பயன் படுத்துபவர்களுக்கு கோயிலில் புதிதாக நிரந்தர சறுக்கு மேடை வசதி அமைக்கப்பட்டுள்ளது.
கோயில் கழிவறைகள் புதுப்பிக்கப்பட்டிருப்பதோடு, புதிய எல்.ஈ.டி விளக்குகளும் மின்விசிறிகளும் பொருத்தப்பட்டுள்ளன.
பக்தர்களின் பாதுகாப்பைக் கருதி, அதிக கண்காணிப்பு கேமராக்களும் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளதாக கோயிலின் நிர்வாகத் தலைவர் ராம.முத்தையா நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
கோயிலின் தூண்கள் வலுவாக்கப்பட்டிருப்பதுடன் உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் புதிய சாயம் பூசப்பட்டு கோயில் புதுப்பொலிவுடன் தோற்றமளிக்கிறது.
டிசம்பர் 15ஆம் தேதி அன்று, காலை 9.50 மணிக்குள் நடக்கவிருக்கும் கோயில் குடமுழுக்கு விழாவில் கிட்டத்தட்ட 15,000 பக்தர்கள் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கு முந்தைய நாளன்று, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் மூலவருக்கு எண்ணெய் சாற்றுதலில் பக்தர்கள் கலந்து கொள்ளலாம்.
குடமுழுக்கு விழாவை முன்னிட்டு கிரேத்தா ஆயர், கியோங் செய்க் சாலைகள் 14 டிசம்பர் மாலை 7 மணி முதல் 15 டிசம்பர் இரவு 9 மணி வரை மூடப்படும்.
ஒரே பந்தியில் 1,000 பேர் வரை உண்ணக்கூடிய அன்னதானக் கூடம் ஊட்ரம் பார்க் பெருவிரைவு ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள திறந்தவெளித் திடலில் அமைக்கப்பட்டுள்ளது.
கோயிலின் வெளிப்புறத்திலும் அன்னதானக் கூடத்திலும் பக்தர்கள் குடமுழுக்கு விழாவை காணும் வகையில் பெரிய எல்.ஈ.டி திரைகள் பொருத்தப்பட உள்ளதாக திரு முத்தையா குறிப்பிட்டார்.
மூத்த குடிமக்களும் சிறப்பு தேவையுடைய பக்தர்களும் ஒதுக்கப்பட்டுள்ள தனி வரிசையை பயன்படுத்த விரும்பினால் அதற்கான குறிப்பிட்ட எண்ணிக்கையிலுள்ள சிறப்பு நுழைவு அட்டைகளை டிசம்பர் 8 ஆம் தேதிக்குள், ஸ்ரீ தெண்டாயுதபாணி ஆலய அலுவலகத்திற்கு நேரில் சென்று பெற்றுக்கொள்ள வேண்டும்.
கோயிலுக்கு அருகில் போதுமான கார்கள் நிறுத்த இடவசதிகள் இல்லாததால் பக்தர்கள் பொது போக்குவரத்தைப் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகின்றனர்.
‘‘குடமுழுக்கு விழாவை சிறப்பாக வழிநடத்த கிட்டத்தட்ட 1,000 தொண்டூழியர்கள் வரை ஆயத்தமாகி வருகின்றனர். தொண்டூழியர்களுடன் ஒத்துழைத்து, இடப்பற்றாக்குறையினால் கோயிலுக்குள் நுழைந்து வழிபட சற்று நேரம் எடுக்கும் என்பதை கருத்தில்கொண்டு, பக்தர்கள் பொறுமையை கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்,’’ என்றார் திரு ராம.முத்தையா.